
தீபாவளியையொட்டி துணை சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் முதுநிலை மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி பல்வேறு முன்னேற்பாடுகளை மக்கள் நல்வாழ்வுத் துறை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, பட்டாசு விபத்துகளால் ஏற்படும் தீக்காயங்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க அனைத்து துணை சுகாதார நிலையங்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அவசர காலங்களைக் கையாளும் வகையில் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் கட்டாயம் பணியில் இருக்க வேண்டும் என்றும் மக்கள் நல்வாழ்வு துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் சோமசுந்தரம் கூறியதாவது:
கிராமப்புறங்களைப் பொருத்தவரையில் துணை சுகாதார நிலையங்கள், தீபாவளியையொட்டி நாள்களில் முழு நேரமும் இயங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, சிறிய அளவிலான காயங்களுக்கு உடனடி முதலுதவி சிகிச்சை அளித்து தேவைக்கு ஏற்ப 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் மாவட்டத் தலைமை மருத்துவமனை அல்லது மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
மேலும், 424 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில், ஞாயிறு, திங்கள்கிழமைகளில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று தொலைநிலை மற்றும் மலை கிராம மக்களுக்காக 420 நடமாடும் மருத்துவ வாகனங்களும் செயல்படும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.