தமிழகத்தில் இன்று தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

தமிழகத்தில் வியாழக்கிழமை முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது.
மழை (கோப்புப்படம்)
மழை (கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் வியாழக்கிழமை முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது. இதன்காரணமாக 4 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இந்திய பகுதிகளில் இருந்து தென்மேற்கு பருவமழை வியாழக்கிழமை பிற்பகலுக்குள் விலகக்கூடும். அதேசமயம், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள், கேரளம், மாஹே, தெற்கு உள்கர்நாடகம், ராயலசீமா, தெற்கு கடலோர ஆந்திர பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடங்கக்கூடும்.

ஆரஞ்சு எச்சரிக்கை: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த முதல் மிக பலத்த மழையும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

இதேபோல, வெள்ளிக்கிழமை (அக்.17) சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழையும், தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் காரைக்கால் பகுதிகளில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், 23 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை நகரின் ஒரு சில பகுதிகளில் வியாழக்கிழமை (அக்.16) இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தின் எண்ணூர் பகுதியில் 140 மி.மீ. மழை பதிவானது. கத்திவாக்கம் - 100 மி.மீ, மணலி புதுநகரம் (சென்னை), கோடநாடு (நீலகிரி) - 90 மி.மீ. பதிவானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com