
பூண்டி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் ஏரி முழுக்கொள்ளளவை எட்டியதால் இரண்டு மதகுகள் வழியாக 700 கனஅடி உபரிநீர் திறப்பால் கொசஸ்தலையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
திருவள்ளூர் பகுதியில் தொடர்ந்து கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன.
இதேபோல் பூண்டி ஏரிக்கான நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதாலும் கிருஷ்ணா கால்வாய் நீர்வரத்து போன்றவைகளால் மழைநீர் வரத்து 2,600 கன அடியாக அதிகரித்து உள்ளது. இந்த ஏரி 35 அடி உயரம் கொண்டது. 3,231 மில்லியன் கன அடிநீர் வரையில் சேமித்து வைக்கலாம்.
இதற்கு இடையே பூண்டி ஏரிக்கான நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து அதிக நீர்வரத்தால் புதன்கிழமை ஏரி முழுக்கொள்ளளவை எட்டியது.
இதையடுத்து ஏரியின் பாதுகாப்பு கருதி ஆட்சியர் உபரிநீர் திறக்க புதன்கிழமை உத்தரவிட்டார்.
அதன்பேரில் இன்று மாலையில் 7,10 ஆகிய இரு மதகுகள் வழியாக 700 கன அடி உபரிநீர் திறந்துவிடப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நீர், திருவள்ளூர் அருகே தாமரைப் பாக்கம் தடுப்பணையில் சேமித்து மேல்வரத்துக் கால்வாய் மூலம் சோழவரம் ஏரிக்கு திறந்துவிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மழை நீர்வரத்து அதிகரித்தால் உபரிநீர் திறப்பும் அதிகப்படுத்தப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.