
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் தவெக நிர்வாகிகள் தங்களது பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை தெரிவித்தது.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ஆம் தேதி இரவு தவெக பிரசார கூட்டத்தின் போது, நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
இது தொடர்பாக தவெக கரூர் மேற்கு மாவட்டச் செயலர் மதியழகன், பொதுச் செயலர் ஆனந்த், மாநில இணைச் செயலர் நிர்மல்குமார் ஆகியோர் மீது கரூர் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மதியழகனை, திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகேயுள்ள கிராமத்தில் கட்சி நிர்வாகி வீட்டில் பதுங்கியிருந்தபோது தனிப் படையினர் கைது செய்தனர். மேலும், அவருக்கு அடைக்கலம் அளித்த தவெக நிர்வாகி பவுன்ராஜையும் கடந்த மாதம் 29-ஆம் தேதி போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து, தனக்கு பிணை வழங்கக் கோரி, கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் பவுன்ராஜ் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில், பவுன்ராஜ் தனக்கு பிணை வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழுவில் மனுதாரர் இடம் பெறவில்லை. எனவே, அவருக்கு பிணை வழங்க வேண்டும் என்றார்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை பொருத்தவரை, தவெக நிர்வாகிகள் தங்களது பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது. அனைவருக்கும் பொறுப்புள்ளது. இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. எனவே, சிபிஐயை எதிர் மனுதாரராக இணைத்து மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.