தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு தீர்வு காண மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை வியாழக்கிழமை (அக். 16) சந்தித்து வலியுறுத்துவேன் என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்துக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செவ்வாய்க்கிழமை இரவு வந்தார். புதன்கிழமை காலை சங்கர மடம் சென்று அங்கு ருத்ர அபிஷேகம் செய்தார். இதையடுத்து, அபிஷேகம் செய்த கங்கை நீருடன் ராமநாத சுவாமி கோயிலுக்குச் சென்று பிரதமர் நரேந்திர மோடி பெயரில் அர்ச்சனை செய்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் எல்.முருகன் கூறியதாவது:
ராமேசுவரத்தை உலகத் தரம் வாய்ந்த சுற்றுலா, புனிதத் தலமாக மாற்ற வேண்டும் என்பதுதான் பிரதமரின் விருப்பம். திருவனந்தபுரம்-மதுரைஅமிர்தா விரைவு ரயில் வெள்ளிக்கிழமை (அக். 17) முதல் ராமேசுவரம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ராமேசுவரம் ரயில் நிலையம் பெரிய அளவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு மூலம் கடந்த 11 ஆண்டுகளில் தமிழகத்துக்கு மட்டும் ரூ. 11 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒவ்வொரு திட்டத்துக்கும் வழங்கப்படும் நிதி செலவினங்கள் குறித்த விவரங்களை நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் தமிழக அரசு தெரிவிக்க வேண்டும்.
ஆனால், தமிழக அரசு ஒவ்வொரு திட்டத்துக்கும் வழங்கப்படும் நிதியை வேறு திட்டங்களுக்கு மடைமாற்றுவதால் நிர்ணயித்த காலத்துக்குள் செலவு விவரங்களை அனுப்புவதில்லை. இதனால்தான், மத்திய அரசு நிதி வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது.
பாம்பன் மீனவர்கள் 10 பேருக்கு இலங்கை நீதிமன்றம் தலா ரூ. 1.50 கோடி (இலங்கைப் பணம்) அபராதம் விதித்தது குறித்து பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் என்னைச் சந்தித்து வலியுறுத்தினர். மேலும், அவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.
தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு தீர்வு காண தில்லியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை வியாழக்கிழமை (அக். 16) சந்தித்து வலியுறுத்துவேன்.
கச்சத்தீவு விவகாரத்தில் திமுக நாடகமாடுகிறது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.