சென்னைக்கு எச்சரிக்கை! நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்ட உதயநிதி!

சென்னையில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்டார் துணை முதல்வர் உதயநிதி
உதயநிதி ஆய்வு
உதயநிதி ஆய்வு
Published on
Updated on
2 min read

சென்னை: சென்னையில் கடந்த ஒரு சில நாள்களாகவே விட்டு விட்டு கனமழை பெய்து வரும் நிலையில், புதன்கிழமை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், சென்னையில் நேற்று நள்ளிரவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இன்று காலை முதலே அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. நேற்றும் பரவலாக கனமழை பெய்த நிலையில், நள்ளிரவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னையின் பெரும்பாலான பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

வேளச்சேரி எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையம், நாராயணபுரம் ஏரி, பள்ளிக்கரணை, ஆதம்பாக்கம் கக்கன் பாலம், அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று அங்குள்ள நிலைமைகளை கண்காணித்தார்.

பிறகு, சென்னையில் அதிகம் பாதிக்கப்படும் இடம், அங்கு எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் என அனைத்தையும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பிறகு, சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு மையம் சென்றார். அங்கு மக்களிடமிருந்து வரும் புகார்கள் குறித்தும் எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

மழை மற்றும் மழைநீர் தேங்குவது குறித்து சென்னை கட்டுப்பாட்டு மையத்துக்கு வரும் புகார்களை உடனடியாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிவாரண முகாம்களில் ஏராளமான மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அனைத்துத் துறை அமைச்சர்களும் அதிகாரிகளும் முழு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்கிறோம் என்றும் துணை முதல்வர் உதயநிதி கூறியுள்ளார்.

மேலும் இன்று அதிகாலையில் சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவல்லிக்கேணி வெங்கட்ரங்கம் தெருவில் செயல்பட்டு வரும் சமுதாய நலக்கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள மைய சமையல் கூடம் மற்றும் தற்காலிக நிவாரண மையம் ஆகியவற்றில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, சிந்தாதிரிப்பேட்டை அய்யா தெருவில் உள்ள மைய சமையல் கூடத்தில் உணவு தயாரிக்க தேவையான கட்டமைப்பு வசதிகள் தயார் நிலையில் இருப்பதையும், சிந்தாதிரிப்பேட்டை மேற்கு கூவம் சாலையில் உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண மையத்தில் பொதுமக்கள் தங்குவதற்கு தேவையான பாய், தலையணை உள்ளிட்டவை தயாராக இருப்பதையும், அடிப்படை வசதிகள் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அண்ணாசாலை – ஜி.பி.சாலை சந்திப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள மழைநீர் வடிகால் கட்டுமான பணிகளை துணை முதல்வர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுகளின்போது வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்யும் கனமழையை பொதுமக்கள் எதிர்கொள்ள தேவையான உதவிகளையும், பணிகளையும் அர்ப்பணிப்பு உணர்வுடன் மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கும் உதயநிதி அறிவுறுத்தினார்.

Summary

Deputy Chief Minister Udhayanidhi conducted a midnight inspection as heavy rain warning was issued in Chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com