
சென்னையில் தொடர்ந்து இரண்டு நாள்களுக்கும் மேலாக விட்டுவிட்டு கனமழை பெய்து வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி சென்னை மாநகரில் 215 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் ஏழை எளியோர் 1 இலட்சத்து 47 ஆயிரம் பேருக்கு இன்று காலை உணவு வழங்கப்பட்டது ! சென்னை மாநகராட்சி, சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் 24,149 பேர் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு தெரிவித்திருப்பதாவது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 16.10.2025 அன்று வடகிழக்குப் பருவமழை தொடங்கியதன் காரணமாக தமிழ்நாடு முழுவதிலும் பரவலாக பெய்து வரும் மழையினால் மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும்,கடந்த 19.10.2025 அன்று சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திலிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வு மேற்கொண்டுமுன்னெற்பாடு நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும், கரையோரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லவும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.
இதன் தொடர்ச்சியாக மழையால் பாதிப்பு ஏற்பட்டால் மக்கள் தங்குவதற்காக முகாம்களை தயார்நிலையில் வைத்திருக்கவும், முகாம்களில் மக்களுக்கு வழங்கிட உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்திட வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
சென்னையில் மேற்கொண்டு வரும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்தும் மழை நீர் தேங்கும் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்துமாறும் முதல்வர் ஸ்டாலின் அலுவலர்களைக் கேட்டுக் கொண்டார்.
முதல்வரின் உத்தரவுகளுக்கேற்ப சென்னை மாநகரில் மழைநீர் தேங்கும் பகுதிகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் 215 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் தங்கவைக்கப்படும் மக்களுக்கு உணவு வழங்குவதற்காக 106 உணவு தயாரிப்புக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் 68 உணவு தயாரிப்புக் கூடங்களில் உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.
சென்னையில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பெருநகர மாநகராட்சி வாயிலாக இந்த உணவு மையங்களிலிருந்து இன்று (22.10.2025) காலை 1 இலட்சத்து 46 ஆயிரத்து 950 பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
24 மணிநேரமும் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் பொதுமக்களிடமிருந்து 1913 என்ற உதவி எண்ணிற்கு வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சியில் அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 22 ஆயிரம் பேரும் சென்னை குடிநீர்வாரியத்தின் மூலம் 2149 களப்பணியாளர்களும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.