

தஞ்சை: தீபாளிக்கு ஊருக்கு வந்த இளைஞர், தஞ்சையில் உள்ள அரசுப் பள்ளியில் தற்கொலை செய்துகொண்டார். இவர் இந்தப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் என்று கூறப்படுகிறது.
அரசு பள்ளியில் முன்னாள் மாணவர் தற்கொலை செய்துகொண்டதுடன், தன்னுடைய தற்கொலைக்கு அதேப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் காரணம் என பள்ளி சுவரில் எழுதி வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், இது கொலையா? அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மல்லிபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில், தற்கொலை செய்தகொண்டதாகக் கூறப்படும் இளைஞர், சின்னமனை பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் விஷ்ணு (20) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர் ஆவார்.
இவர் தற்போது மதுரை அண்ணா பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தீபாவளி பண்டிகைக்காக விடுமுறைக்கு ஊருக்கு வந்துள்ளார். நேற்று வியாழக்கிழமை மாலை முதல் விஷ்ணுவை காணவில்லை.
இன்று காலை அவர் படித்த மல்லிப்பட்டினம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். மேலும் பள்ளி சுவற்றில் என் சாவுக்கு காரணம் பாபு என எழுதப்பட்டிருந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் இது குறித்து சேதுபாவாசத்திரம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர் விஷ்ணு உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது கொலையா? தற்கொலையா ? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சுவற்றில் எனது சாவுக்கு காரணம் பாபு என்று எழுதப்பட்டிருந்த நிலையில், பாபு என்பவர் அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் மாணவர் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து பள்ளிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே பள்ளியில்தான், தற்காலிக ஆசிரியர் ஒருவர், வகுப்பறையில் மாணவரால் குத்தி கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.