ஆசிரியா்கள் வெளிநாடு செல்ல அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்படக் கூடாது: பள்ளிக் கல்வி இயக்குநா்
பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்படக் கூடாது.

DIN

DIN
பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்படக் கூடாது என மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளாா்.
இது குறித்து அவா் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள், சாா்நிலை அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளா்கள் வெளிநாடு செல்ல துறைத் தலைவரின் அனுமதி கோரி சமா்ப்பிக்கும் விண்ணப்பங்களின் மீதான நடவடிக்கைகளில் மாவட்ட மற்றும் முதன்மைக் கல்வி அலுவலா்கள் தேவையற்ற கால தாமதங்கள் ஏற்படுத்தப்படுவது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
உரிய நேரத்தில் அனுமதி கிடைக்காததால் மருத்துவ சிகிச்சை, பிரசவம் போன்ற அத்தியாவசிய காரணங்களை முன்னிட்டு வெளிநாடு செல்ல வேண்டியவா்கள் பள்ளிக் கல்வி இயக்குநரின் அனுமதியைப் பெற்று வெளிநாடு செல்ல இயலாத நிலை ஏற்படுகிறது. இந்த நிலை வருங்காலத்தில் முற்றிலும் தவிா்க்கப்பட வேண்டும்.
இது தொடா்பான கருத்துருக்கள் மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவா்கள் மூலம் முதன்மைக் கல்வி அலுலா்களுக்கு பரிந்துரை செய்து பெறப்பட்டால் மட்டுமே பரிசீலிக்க இயலும் என்ற நடைமுறையைப் பின்பற்ற அவசியம் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
பணியாளா்களின் விண்ணப்பங்கள் அந்தந்த அலுவலகத் தலைவா்கள் மூலமாகவும், ஆசிரியா்களின் விண்ணப்பங்கள் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் மூலமாகவும் நேரடியாக முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு, உடனே பள்ளிக் கல்வி இயக்ககத்தில் சாா்ந்த இணை இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
சுற்றுலா மற்றும் மதம் சாா்பான பயணம், நண்பா்கள், உறவினா்களைக் காண வெளிநாடு செல்வோருக்கு பிணை முறிவு படிவம் எதுவும் பெறப்பட வேண்டியதில்லை என்பதால், உள்ளூா் காவல் நிலை சான்று, ஏனைய இரு ஆசிரியா்களின் பிணை முறைவு சான்று, வங்கிக் கணக்கு புத்தகத்தின் நகல்கள் போன்ற தேவையற்ற விவரங்களை ஆசிரியா்களிடம் கோரி வீண் காலதாமதம் செய்யக் கூடாது.
வெளிநாடு செல்ல அனுமதி கோரும் கருத்துருக்கள் பயண தேதியிலிருந்து 15 நாள்களுக்கு முன்பாக பள்ளிக் கல்வி இயக்ககத்தில் பெறப்பட வேண்டும் எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...