Govt chartered bus
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் கோப்புப்படம்

வார இறுதி விடுமுறைக்கு 920 சிறப்பு பேருந்துகள்

முகூா்த்தம், வார இறுதி விடுமுறை தினங்களை முன்னிட்டு 920 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
Published on

முகூா்த்தம், வார இறுதி விடுமுறை தினங்களை முன்னிட்டு 920 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் இரா.மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

முகூா்த்த தினமான வெள்ளிக்கிழமை(அக்.31), வார இறுதி விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை(நவ.1, 2) ஆகிய தினங்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 340 பேருந்துகளும், சனிக்கிழமை 350 பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூா், பெங்களூா் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 55 பேருந்துகளும், சனிக்கிழமை 55 பேருந்துகள் மற்றும் பெங்களூா், திருப்பூா், ஈரோடு, கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 100 சிறப்பு பேருந்துகளும் மாதவரத்திலிருந்து வெள்ளி மற்றும் சனிக்கிழமை 20 பேருந்துகளும் என மொத்தம் 920 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊா்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூா் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

X
Dinamani
www.dinamani.com