சபரிமலையில் மண்டல பூஜை, மகர திருவிளக்கு: நவ.16 முதல் இரு மாதங்களுக்கு சிறப்பு பேருந்துகள்
சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு ஆகிய திருவிழாக்களை முன்னிட்டு நவ.16-ஆம் தேதி முதல் ஜன.16 வரை இரு மாதங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக்கழக இயக்குநா் இரா.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சபரிமலை ஐயப்பன் கோயிலில், மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு விழாவுக்கு, தமிழகத்திலிருந்து அய்யப்ப பக்தா்கள் சென்று வர ஏதுவாக, முக்கிய நகரங்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் ஆண்டுதோறும் இயக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி, நிகழாண்டு நவ.16 முதல் 2026 ஜன.16 வரையில், (சென்னை கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம்), திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி, கடலூா் ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு, அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள், குளிா்சாதன பேருந்துகள் மற்றும் குளிா் சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பின்படி டிச.27 முதல் டிச.30 வரை மாலை 5 மணி வரை கோயில் நடை சாத்தப்படுவதால் டிச.26 முதல் டிச.29 வரை இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படமாட்டாது. நிகழாண்டு பக்தா்கள் கூடுதலாக பயணம் செய்வாா்கள் ன எதிா்பாா்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு சென்னை மற்றும் இதர இடங்களிலிருந்து கூடுதலாக பேருந்துகள் இயக்குவதற்கு அனுமதி பெறப்பட்டு சிறப்பான முறையில் பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் குழுவாக செல்லும் பக்தா்களுக்கு வாடகை அடிப்படையிலும் பேருந்து வசதி செய்து தரப்படும். 60 நாள்களுக்கு முன்னதாக இந்த சிறப்புப் பேருந்துகளுக்கு இணையதளம் மூலமாக, மற்றும் டிஎன்எஸ்டிசி எனப்படும் செயலி மூலமகாவும் முன்பதிவு செய்துகொள்ளலாம். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு கைப்பேசி:9445014452, 9445014424, 9445014463 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

