

தமிழக மக்களை திசை திருப்புவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சிக்கிறார் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
மாமல்லபுரத்தில் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசு மீதும், பாஜக மீதும் வழக்கம்போல வன்மத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஜிஎஸ்டி, தேசிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு என மத்திய அரசு தொல்லை கொடுப்பதாக வெறுப்பு அரசியலை வெளிப்படுத்தியுள்ளார்.
வடக்கு, தெற்கு மற்றும் புது தில்லி, சென்னை என பிரிவினை வாதம் பேசுவதன் மூலம் திமுக மீது கோபத்திலிருக்கும், தமிழக மக்களை திசை திருப்புவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கனவு காண்கிறார். அவ்வாறு அவர் பேசுவதன் மூலம் திமுகவினரிடம் வரவேற்பைப் பெறலாம். ஆனால், தமிழக மக்களிடம் வாக்குகளை அவரால் பெறமுடியாது.
அரசுத் துறைகளின் முறைகேடு குறித்து மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிக்கத் தயாரா என்பதை முதல்வர் விளக்க வேண்டும். பருவமழை தொடங்கும் முன்பே நெல் கொள்முதலை தொடங்காமல் பல ஆயிரம் டன் நெல் மழையில் நனைந்து வீணாகியுள்ளது. அதனால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிஎம்ஸ்ரீ திட்டத்தை இடதுசாரி கட்சிகள் ஆளும் கேரள அரசு கூட ஏற்று செயல்படுத்த முன்வந்துள்ளது. ஆனால், தமிழக முதல்வரின் எதிரான நடவடிக்கையால் தமிழக மக்களின் நலன் பாதிக்கப்படுகிறது.
தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது குறித்து மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால், வருகிற பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சி அகற்றப்பட்டடு, மக்கள் விரும்பும் நல்லாட்சி அமையும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.