

தமிழ்நாட்டின் உரத் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை எழுதிய கடிதம்:
தமிழ்நாட்டுக்கு குறுவை (காரீஃப்) பருவத்துக்குப் போதுமான உரங்கள் கிடைப்பதை உறுதி செய்ததற்காக பிரதமருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், அந்த வகையில், 2025 குறுவைப் பருவத்துக்கு முறையே 4.41 லட்சம் மெட்ரிக் டன் யூரியா, 1.75 லட்சம் மெட்ரிக் டன் டி.ஏ.பி., 0.95 லட்சம் மெட்ரிக் டன் எம்.ஓ.பி. மற்றும் 4.58 லட்சம் மெட்ரிக் டன் என்.பி.கே. காம்ப்ளக்ஸ் உரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன, இதுவரை, 4.37 லட்சம் மெட்ரிக் டன் யூரியா, 1.59 லட்சம் மெட்ரிக் டன் டி.ஏ.பி., 0.70 லட்சம் மெட்ரிக் டன் எம்.ஓ.பி. மற்றும் 3.70 லட்சம் மெட்ரிக் டன் என்.பி.கே. காம்ப்ளக்ஸ் உரங்களைப் பெற்றுள்ளோம்.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதாலும், அனைத்து முக்கிய நீர்த்தேக்கங்களிலும் தண்ணீர் இருப்பதாலும், சம்பா பருவத்தில் அதிகபட்ச நெல் சாகுபடி பரப்பளவில் உற்பத்தி செய்ய விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நவம்பர் மாதத்தில் உரங்கள், குறிப்பாக யூரியாவின் தேவை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சம்பா நெல் பரப்பளவு அதிகரிப்பதுடன், கூடுதலாக, மக்காச்சோளம், உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை மற்றும் கரும்பு போன்ற பிற பயிர்களின் சாகுபடியும் மாநிலம் முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
நடப்பு சம்பா பருவத்தில் பயிர் சாகுபடி பல்வேறு சாதகமான காரணிகளால் முழு வீச்சில் நடைபெற்றுவரும் நிலையில், நேரடி உரங்களுக்கான தேவை குறிப்பாக, யூரியாவுக்கான தேவை வரும் நாள்களில் பெருமளவில் அதிகரிக்கும். எனவே, மாநிலத்தால் முன்மொழியப்பட்ட உரங்களின் தேவையை, சம்பந்தப்பட்ட உர நிறுவனங்கள் உரிய நேரத்தில் பரிசீலித்து, வரும் மாதங்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்ய சரியான நேரத்தில் வழங்குவதை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தனது கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.