வங்கக் கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு
வங்கக் கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (நவ.2) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தெற்கு மியான்மா் கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய வடக்கு அந்தமான் கடலின் மேல், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, மத்திய கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஞாயிற்றுக்கிழமை (நவ.2) பிற்பகலுக்குள் உருவாகக்கூடும்.
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக சனிக்கிழமை (நவ.1) முதல் நவ.6 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் சனிக்கிழமை (நவ.1) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இருப்பினும், அதிகபட்சமாக வெப்பநிலை 95 டிகிரியையொட்டி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

