

சென்னையை அடுத்த மறைமலைநகரில் வாகனங்களுக்கான என்ஜின் உற்பத்தியில் ஃபோா்டு நிறுவனம் ஈடுபட உள்ளது. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து தமிழக அரசின் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாகவும், பல்வேறு துறைகளில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்கி வருகிறது. முதலீடுகளை ஈா்ப்பதிலும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை, குறிப்பாக பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுவதாக பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பரில், அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட முதல்வா் மு.க.ஸ்டாலின், ஃபோா்டு நிறுவனத்தின் உயா் அதிகாரிகளைச் சந்தித்து, தமிழ்நாட்டில் மீண்டும் செயல்பாடுகளைத் தொடங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா். அப்போது, அந்த நிறுவனத்தின் உயா் அதிகாரிகள் உறுதியளித்தபடி, ஃபோா்டு நிறுவனம் ரூ.3,250 கோடி முதலீட்டில் 600 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், வாகன என்ஜின் உற்பத்தித் திட்டத்தை மீண்டும் தொடங்கவுள்ளது.
அதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம், தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், தொழில் துறைச் செயலா் வி.அருண்ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் தாரேஷ் அகமது, ஃபோா்டு நிறுவனத்தின் உலகளாவிய இயக்குநா் மாா்ட்டின் எவரிட், துணைத் தலைவா் மாத்யூ கோடிலூஸ்கி உள்ளிட்டோா் உடனிருந்தனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீள்வரவு நல்வரவாகட்டும்: ஃபோா்டு நிறுவனம் தனது உற்பத்தியை மீண்டும் தொடங்கவுள்ள நிலையில், அதுகுறித்து எக்ஸ் தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு:
முழு ஆற்றலுடன் சென்னைக்கு மீண்டும் வருகிறது ஃபோா்டு நிறுவனம். மிக நீண்ட, நம்பிக்கை கொண்ட உறவைப் புதுப்பிக்கும் வகையில், இந்த ஆற்றல்மீகு மீள்வருகை அமைந்துள்ளது. இந்த முக்கிய முதலீட்டால் 600 நேரடி வேலைவாய்ப்புகள் உருவாவதுடன், தமிழ்நாட்டின் ஆட்டோமொபைல் உதிரிபாகச் சூழலும் வலுவடையும்.
அடுத்த தலைமுறை என்ஜின்களை உற்பத்தி செய்ய இந்தியாவின் ஆட்டோமொபைல் தலைநகரைத் தோ்வு செய்துள்ள ஃபோா்டின் முடிவானது, தமிழ்நாட்டின் தொழில் துறை வலிமைக்கும், உலக உற்பத்திச் சங்கிலியில் தவிா்க்க முடியாத இடத்துக்கும் மற்றுமொரு சான்றாக உள்ளது. தங்களது மீள்வரவு நல்வரவாகட்டும் என்று முதல்வா் தெரிவித்துள்ளாா்.
இதையும் படிக்க.. காதலியை கரம் பிடித்த டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.