
திருவள்ளூரில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பிணியாக்கிய வழக்கில் குற்றவாளிக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் பாதித்தவருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு தொகை வழங்கவும் திருவள்ளூர் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அடுத்த கூடப்பாக்கம் குடிசை மாற்று வாரியம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 8 ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமி(14), அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ரமேஷ் (40 ) என்பவர், சிறுமி வீட்டில் தனியாக இருக்கும்போது அவரை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் அந்த மாணவி கர்ப்பமானார்.
இதுகுறித்து பெற்றோருக்கு தெரிய வந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து சிறுமியின் பெற்றோர், கடந்த 2022-ல் பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ரமேஷ் மீது புகார் கொடுத்திருந்தனர்.
அந்தப் புகாரின் பேரில் குற்றவாளி ரமேஷை போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர்,
இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து குற்றவாளி வழக்கின் விசாரணைக்காக கடந்த 3 ஆண்டுகளாக திருவள்ளூர் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தார்.
இந்த வழக்கின் இறுதிக் கட்ட விசாரணை திருவள்ளூர் போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரி முன்பாக இன்று(புதன்கிழமை) நடைபெற்றது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆதரவாக அரசு தரப்பு வழக்கறிஞர் விஜயலட்சுமி ஆஜரானார்.
அப்போது இந்த வழக்கில் குற்றவாளி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் பிரிவு 450 கீழ் அவருக்கு 10 ஆண்டுகளும் 10 ஆயிரம் அபராதமும் பிரிவு -342 கீழ் 1 ஆண்டும் ரூ.1000 அபராதமும் பிரிவு -354 கீழ் 5 ஆண்டுகள், 5 ஆயிரம் அபராதமும் பிரிவு 5(l),5j (ii) 6(1) 10 ஆண்டுகள்,ரூ.10 ஆயிரமும் என மொத்தம் 26 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 26,000 அபராதம் விதித்தும் நீதிபதி தீர்ப்பளித்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.