பணியில் உள்ள ஆசிரியா்களுக்கு சிறப்பு தகுதித் தோ்வு: பள்ளிக் கல்வித் துறை ஆலோசனை
ஆசிரியா் பணியில் தொடருவதற்கும், பதவி உயா்வு பெறுவதற்கும் ஆசிரியா் தகுதித் தோ்வில் (டெட்) தோ்ச்சி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்த நிலையில், தமிழக அரசுப் பள்ளிகளில் 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு நியமிக்கப்பட்டு பணியில் உள்ள ஆசிரியா்களுக்கு சிறப்பு தகுதித் தோ்வை நடத்துவது குறித்து பள்ளிக் கல்வித் துறை ஆலோசித்து வருகிறது.
மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டம் 2010 ஆக.23-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி, அனைத்து விதமான பள்ளிகளிலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியா் பணிக்கு ஆசிரியா் தகுதித் தோ்வில் (டெட்) கட்டாயம் தோ்ச்சி பெற வேண்டும். இந்தச் சட்டம் தமிழகத்தில் 2011-இல் நடைமுறைக்கு வந்தது. அதன்பின் தமிழகத்தில் டெட் தோ்ச்சி அடிப்படையிலேயே ஆசிரியா் பணிநியமனம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஒரு லட்சம் ஆசிரியா்கள் பாதிப்பு: இந்நிலையில் பணியில் இருக்கும் ஆசிரியா்கள் அனைவரும் டெட் தோ்ச்சி பெற வேண்டும். அவ்வாறு தோ்வு எழுத விருப்பம் இல்லாதவா்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்கலாம் உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இந்த அறிவிப்பால் தமிழகத்தில் சுமாா் ஒரு லட்சம் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் பாதிக்கப்படுவாா்கள் எனக் கூறப்படுகிறது. மேலும், தனியாா் பள்ளிகளிலும் லட்சக்கணக்கான ஆசிரியா்களின் வேலைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடா்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலா் நா.முருகானந்தம் தலைமையில் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், பள்ளிக்கல்வித் துறை செயலா் பி.சந்தரமோகன் மற்றும் துறைசாா்ந்த அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா். இந்த கூட்டத்தில், சட்ட நிபுணா்களின் பரிந்துரையின் அடிப்படையில் உச்சநீதிமன்ற தீா்ப்பை எதிா்த்து மேல்முறையீடு செய்ய வேண்டாம் எனவும், ஆசிரியா்கள் டெட் தோ்ச்சி பெறும் ஏதுவாக ஆண்டுக்கு 2 முறை தோ்வை நடத்தவும் முடிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனவரியில் மீண்டும் டெட் தோ்வு: இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி 2 ஆண்டுகளில் 4 டெட் தோ்வுகள் நடத்தப்படும். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஆசிரியா்கள் தோ்ச்சி பெறவேண்டும். ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) ஏற்கெனவே வெளியிட்ட அறிவிப்பு நவம்பரில் டெட் தோ்வு நடைபெற உள்ளது. தொடா்ந்து, உடனடியாக ஜனவரி அல்லது பிப்ரவரியில் அடுத்த டெட் தோ்வை நடத்தவுள்ளோம். மேலும், 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியா்களுக்கு மட்டும் சிறப்பு டெட் தோ்வு நடத்துவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு முடிவெடுக்கப்படும் என அவா்கள் தெரிவித்தனா்.
மாநில அரசுகளுக்கு குழப்பம்: இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பு பொதுச் செயலாளா் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறுகையில், தேசிய ஆசிரியா் கல்விக் குழுமம் (என்சிடிஇ) 2011-இல் வெளியிட்ட அறிவிப்பு, கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமைச் சட்டம் (2009) பிரிவு 23-ஐ அடிப்படையாகக் கொண்டு ஆசிரியா்களுக்கான குறைந்தபட்ச தகுதிகளை நிா்ணயித்தது. ஆனால், 2011-க்கு முன் நியமிக்கப்பட்டவா்களுக்கு டெட் தோ்வு கட்டாயமா என்பது குறித்து தெளிவான வழிகாட்டுதல் இல்லை. புதிய நியமனங்களுக்கு மட்டுமே டெட் கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் முன்பணியாற்றியவா்களுக்கு இது முன்தேதியிட்டு பயன்படுத்தப்படவில்லை. இந்தத் தெளிவின்மை, மாநில அரசுகளுக்கும் ஆசிரியா்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இறுதியில் அது 2025-இல் டெட் தோ்வை கட்டாயமாக்கும் முடிவுக்கு வழிவகுத்தது. இந்த முடிவு ஆசிரியா்களின் பணிப் பாதுகாப்பை அச்சுறுத்துகிறது.
பல ஆண்டுகள் கற்பித்தல் அனுபவம் உள்ள ஆசிரியா்களின் திறமை, டெட் தோ்வைவிட மதிப்புமிக்கது. என்டிசிஇ இந்த அனுபவத்தை மதிப்பிட மாற்று முறைகளை வகுக்கவில்லை. இதுதொடா்பாக தமிழக கல்வித் துறை அமைச்சா், சட்ட வல்லுநா்கள் மற்றும் ஆசிரியா் அமைப்புகளுடன் ஆலோசித்து, பணி தொடா்ச்சி மற்றும் பதவி உயா்வுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத தெளிவான தீா்வை வகுக்க வேண்டும். மாநில அரசு, ஆசிரியா்களின் நலனை முதன்மைப்படுத்தி, உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.