
கோவை: அதிமுகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், இன்று கோவை விமான நிலையத்திலிருந்து தில்லி புறப்பட்டார். அவர் ஹரித்வாரில் உள்ள ராமர் கோயிலுக்குச் செல்வதாகக் கூறியிருக்கிறார்.
தில்லி செல்ல கோவை விமான நிலையம் வந்திருந்த செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, இங்கிருந்தால் தேவையில்லாத விமர்சனங்கள் வருகின்றன. கடவுள் ராமரைக் காண ஹரித்வார் செல்கிறேன் என்று கூறினார். எடப்பாடி தரப்பில் இருந்து அழைப்பு வந்ததா என்ற கேள்விக்கு, நோ கமெண்ட்ஸ் என்றார்.
அமித் ஷா, மோடியை சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு நான் காண செல்வது கடவுள் ராமரைத்தான் என்று பதிலளித்தார்.
வரும் 9 ஆம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியிடுவதாக சொன்னார்களே என்ற கேள்விக்கு அப்படி ஒன்றும் இல்லை என்று கூறினார் செங்கோட்டையன்.
கோவில் போய் அமைதியாக இருக்கலாம் என்கிறிருக்கிறேன். நான் சொன்ன கருத்துக்கு மாறுபட்ட கருத்து யாரும் சொல்லவில்லை. எனவே, இது அனைவரது மனதிலும் உள்ளது என்று புரிகிறது. பொதுச் செயலாளர் எடுக்கும் முடிவுக்கு நான் கருத்து சொல்ல இயலாது. தொண்டர் மனநிலையைத்தான் நான் சொல்லியிருக்கிறேன். தொண்டர்கள் ஆதரவு தெரிவித்து செல்கின்றனர். இரண்டு நாள்களில் பத்தாயிரம் பேர்களை சந்தித்து உள்ளேன்.
மூத்த தலைவர்கள் யாரேனும் சந்தித்தனரா என்ற கேள்விக்கு நோ கமெண்ட்ஸ் என்றார் செங்கோட்டையன்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் இருந்து இன்று காலை தில்லி புறப்பட்டிருக்கும் நிலையில், பாஜக மூத்த தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.