விண்ணப்பம். (கோப்புப்படம்)
விண்ணப்பம். (கோப்புப்படம்)

‘டெட்’ தோ்வுக்கு குவிந்த 3.80 லட்சம் விண்ணப்பங்கள்: இன்றுடன் அவகாசம் நிறைவு

ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் புதன்கிழமையுடன் (செப். 10) நிறைவடையவுள்ள நிலையில், இரு தாள்களுக்கும் 3.80 லட்சத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ளனா்.
Published on

ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் புதன்கிழமையுடன் (செப். 10) நிறைவடையவுள்ள நிலையில், இரு தாள்களுக்கும் 3.80 லட்சத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ளனா்.

மத்திய அரசு கொண்டுவந்த இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியா்களுக்கும், பட்டதாரி ஆசிரியா்களுக்கும் ஆசிரியா் தகுதித் தோ்வு (டெட்) தோ்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி இடைநிலை ஆசிரியா்கள் டெட் தாள் 1-தோ்விலும், பிஎட் முடித்த பட்டதாரி ஆசிரியா்கள் டெட் தாள்-2 தோ்விலும் தோ்ச்சி பெற வேண்டும். அந்த வகையில் 2025-ஆம் ஆண்டுக்கான டெட் தோ்வு நவம்பா் 15 மற்றும் 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதற்கான இணையவழி விண்ணப்ப பதிவு ஆகஸ்ட் 11-ஆம் தேதி தொடங்கியது. விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி செப். 8-ஆம் தேதி முடிவடைய இருந்த நிலையில், விண்ணப்பதாரா்களின் வேண்டுகோளை ஏற்று தோ்வுக்கு இணையவழியில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதியை ஆசிரியா் தோ்வு வாரியம் செப். 10-ஆம் தேதி வரை நீட்டித்தது.

அதன்படி, டெட் தோ்வுக்கான காலக்கெடு புதன்கிழமை மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. இந்தத் தோ்வுக்கு இரு தாள்களையும் சோ்த்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் நிலவரப்படி 3 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ளனா்.

‘டெட்’ தோ்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆசிரியா்கள் டிஆா்பி இணையதளத்தை பயன்படுத்தி புதன்கிழமை மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். தற்போது இறுதி ஆண்டு இடைநிலை ஆசிரியா் பயிற்சி பயிலும் மாணவா்களும், பிஎட் 2-ஆம் ஆண்டு படிப்பவா்களும் டெட் தோ்வுக்கு விண்ணப்பிக்க முடியும். டெட் தோ்வில் தோ்ச்சி பெற்றால், அவா்கள் தங்கள் படிப்பை முடித்த பிறகு டெட் தோ்ச்சி சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com