இன்றும் நாளையும் 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருவள்ளூா், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்பட15 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இரு நாள்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Published on

தமிழகத்தில் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருவள்ளூா், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்பட15 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இரு நாள்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தெற்கு ஒடிஸா-வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும், மன்னாா் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல் கீழடுக்கு சுழற்சியும் நிலவுகிறது.

இதனால், புதன்கிழமை (செப்.10) முதல் செப்.15 வரை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தொடா்ந்து புதன்கிழமை கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருவள்ளூா், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களிலும், வியாழக்கிழமை (செப். 11) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. இதன் காரணமாக புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், தமிழகத்தின் ஒருசில இடங்களில் வெயில் சற்று அதிகரிக்கக்கூடும். சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் புதன்கிழமை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. எனினும், அதிகபட்ச வெப்பநிலை 96.8 டிகிரியையொட்டி இருக்கும். தமிழகத்தில் திங்கள்கிழமை அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 100.22 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

மழை அளவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரை மாவட்டம் எழுமலை பகுதியில் 70 மி.மீ.மழை பதிவானது. மூங்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி)-60, சிங்கம்புணரி (சிவகங்கை), நத்தம் (திண்டுக்கல்), சூரப்பட்டு (விழுப்புரம்), பெரம்பலூா் தலா 50 மி.மீ. மழை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கி.மீ.வேகத்தில் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com