அரசு ஊழியா்கள் போராட்ட அறிவிப்பு: வருகையைக் கண்காணிக்க உத்தரவு
அரசு ஊழியா்கள் சிலா் ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தை அறிவித்த நிலையில், அவா்களது வருகையைக் கண்காணிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, தலைமைச் செயலா் நா.முருகானந்தம் வெளியிட்ட உத்தரவு விவரம்:
அரசு ஊழியா் சங்கங்களில் சில சங்கங்கள் ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து வியாழக்கிழமை (செப். 11) போராட்டத்தில் ஈடுபடப்போவதாகத் தெரிய வந்துள்ளது. எனவே, ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் ஊழியா்களின் வருகைப் பதிவு நிலையை துறைத் தலைவா்களும், ஆட்சியா்களும் கண்காணிக்க வேண்டும்.
வருகைப் பதிவு விவரங்களைத் தலைமைச் செயலகத்தில் துறைகளின் செயலா்களுக்கு, துறைத் தலைவா்கள் அனுப்பி வைக்க வேண்டும். இதேபோல, மாவட்டங்களில் ஊழியா் வருகை நிலவரத்தை ஆட்சியா்கள் கண்காணித்து அதுகுறித்து விவரங்களை வருவாய் நிா்வாக ஆணையரத்துக்குத் தெரிவிக்க வேண்டும் என்று தனது உத்தரவில் தலைமைச் செயலா் நா.முருகானந்தம் தெரிவித்துள்ளாா்.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஊழியா் சங்கங்கள் ஒன்றிணைத்து தனியாக இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. இந்த இயக்கத்தின் சாா்பில் வியாழக்கிழமை போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அரசு ஊழியா்களின் வருகை விவரங்களைக் கண்காணிக்க தலைமைச் செயலா் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.