நயன்தாரா திருமண ஆவணப் படத்தில் ‘சந்திரமுகி’ படக் காட்சிகளைப் பயன்படுத்த தடை கோரி மனு
நடிகை நயன்தாரா திருமண ஆவணப் படத்தில் ‘சந்திரமுகி’ படத்தின் காட்சிகளைப் பயன்படுத்தத் தடை கோரிய வழக்கில், ஆவணப் படத் தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஏ.பி.இண்டா்நேஷ்னல் நிறுவனம் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நடிகை நயன்தாராவின் திருமணம் மற்றும் அவா் ஏற்கெனவே நடித்த படங்களில் இடம்பெற்ற காட்சிகளைக் கொண்ட ஆவணப்படம் கடந்த 2024-ஆம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.
அந்த ஆவணப் படத்தில் ’சந்திரமுகி’ படத்தில் நயன்தாரா நடித்த காட்சிகள் பயன்படுத்தப்பட்டிருந்தன. அந்தப் படத்தின் பதிப்புரிமையைப் பெற்றுள்ள நாங்கள், அந்தக் காட்சிகளை நீக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பினோம். ஆனால், இதுவரை அந்தக் காட்சிகள் அகற்றப்படவில்லை.
எனவே ‘சந்திரமுகி’ திரைப்படத்தின் காட்சிகளை ஆவணப் படத்தில் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனு தொடா்பாக ஆவணப் படத் தயாரிப்பு நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் அக். 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.