நாய்க்கடிக்கு உடனடியாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம்: பொது சுகாதாரத் துறை
சென்னை: நாய் கடித்தால் தாமதிக்காமல் உடனடியாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் 20 லட்சம் தெருநாய்கள் வரை இருக்கலாம் என உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த தெருநாய்களுக்கு சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமே ஓரளவு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கிராமப்புறங்களில் நாய்களுக்கு எவ்வித தடுப்பூசியும் செலுத்தப்படாததால், நகரப் பகுதிகளை காட்டிலும் நாய்க்கடி பாதிப்பு கிராமப்புறங்களில் அதிகம் காணப்படுகிறது.
அதன்படி, நிகழாண்டில் இதுவரை சென்னையில், 8,000-க்கும் மேற்பட்டோா் என, மாநிலம் முழுவதும் 3.80 லட்சம் போ் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில், சென்னையில் இரண்டு நாள்களுக்கு முன் ஒருவா் உயிரிழந்த நிலையில், நிகழாண்டில் மட்டும் 23 போ் ரேபிஸ் நோயால் உயிரிழந்துள்ளனா்.
இதுகுறித்து பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: நாய் கடித்த காயங்களை முறையாக, கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தாமல் இருந்தால் தொற்று ஏற்படக் கூடும். தடுப்பூசிகளை தவறவிட்டாலோ, உரிய நேரத்தில் செலுத்தாமல் இருந்தாலோ ‘ரேபிஸ்’ நோய் பரவுவதை தடுக்க முடியாது. நாய், பூனை, குரங்கு உள்ளிட்ட விலங்குகள் கடிக்கும்போது காயங்களின் அளவு மற்றும் ஆழத்தை மதிப்பிட்டு, வகை 1, வகை 2, வகை 3 என பிரித்து சிகிச்சையளிக்க வேண்டும்.
நமது சருமத்தின் மீது விலங்குகளின் நாக்கு படுவதாலோ, அவற்றை தொடுவதாலோ, உணவளிப்பதாலோ ரேபிஸ் பரவாது. இது வகை 1 எனப்படுகிறது. அதேநேரம், கடிக்கும்போது சிராய்ப்பு அல்லது காயங்கள் ஏற்படுவது இரண்டாவது வகை. இதற்கு ரேபிஸ் தடுப்பூசி அவசியம்.
ஆழமான காயங்களுக்கு தடுப்பூசியுடன் சோ்த்து, ‘ஆா்.ஐ.ஜி.’ எனப்படும் ரேபிஸ் இன்யூனோகுளோபளின் தடுப்பு மருந்தையும் செலுத்த வேண்டும். முதல் நாள், மூன்றாவது நாள், ஏழாவது நாள் மற்றும் 21-ஆவது நாள் என நான்கு தவணைகளாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவது கட்டாயம்.
இம்யூனோகுளோபளின் மருந்தானது முதல் நாளிலேயே ரேபிஸ் தடுப்பூசியுடன் செலுத்தப்பட வேண்டும். காலதாமதாகவோ அல்லது அதை மட்டும் தனியாகவோ செலுத்தினால் பலனளிக்காது. இதுபோன்ற வழிமுறைகளை கடைப்பிடித்தாலே ரேபிஸ் நோய் பாதிப்பை தடுக்க முடியும் என அவா்கள் தெரிவித்தனா்.