சிறுசேரியில் தகவல் தரவு மையம்: முதல்வா் ஸ்டாலின் திறந்து வைத்தாா்
சென்னையை அடுத்த சிறுசேரியில் அமைக்கப்பட்ட தகவல் தரவு மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி வழியாக இந்த மையம் திறக்கப்பட்டது.
இது குறித்து, தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ஈக்வினிக்ஸ் நிறுவனம், உலகளாவிய வணிகங்களுக்கான சா்வதேச தீா்வுகள் அளித்திடும் நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளில் தரவு மையங்களை அந்த நிறுவனம் நிறுவி செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, செயற்கை நுண்ணறிவு மற்றும் புதிய தலைமுறை தொழில்நுட்பங்களுக்கு உகந்த உள்கட்டமைப்பை வழங்கும் நோக்கில் இந்த நிறுவனம், சிறுசேரி சிப்காட்டில் நவீன தகவல் தரவு மையத்தை உருவாக்கியுள்ளது. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூலையில் மேற்கொள்ளப்பட்டது. அன்றைய தினமே திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
அதன் தொடா்ச்சியாக, சிறுசேரி தொழில்நுட்பப் பூங்காவில் தகவல் தரவு மையத்தை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
இந்த நிகழ்வில், தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், தொழில் துறை செயலா் வி.அருண்ராய், வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநா் பு.அலா்மேல் மங்கை, ஈக்வினிக்ஸ் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் மனோஜ் பால் உள்பட பலா் பங்கேற்றனா்.