அரசு மருத்துவா் பணியிடமாற்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை: உயா்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: சென்னை எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனையிலிருந்து அரசு மருத்துவா்கள் சங்கத் தலைவா் பெருமாள் பிள்ளையை இடமாற்றம் செய்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அரசு மருத்துவா்கள் சங்கத் தலைவா் பெருமாள் பிள்ளை சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மத்திய அரசு மருத்துவா்களுக்கு இணையான ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜூன் 11 முதல் 19-ஆம் தேதி வரை சேலம் மேட்டூரிலிருந்து சென்னை வரை பாதயாத்திரை மேற்கொண்டேன்.
இந்த நிலையில், சென்னை எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனையில் பணியாற்றி வந்த என்னை, நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பணியிடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டது. பாதயாத்திரை மேற்கொண்டது தொடா்பாக என் மீதான துறை ரீதியான நடவடிக்கை நிலுவையில் உள்ள நிலையில் எனது பணியிடமாற்றம் தன்னிச்சையானது. எனவே, பணியிடமாற்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், பாதயாத்திரை செல்வதற்கு முன் உயா் அதிகாரிகளிடம் அனுமதி கோரி கடிதம் கொடுக்கப்பட்டது. அதனை கருத்தில் கொள்ளாமல், பழிவாங்கும் நோக்கில் பணியிடமாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வாதிடப்பட்டது.
அப்போது அரசுத் தரப்பில், மனுதாரரை திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் குழந்தைகள் மருத்துவத் துறையின் இணைப் பேராசிரியராக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பணியிடமாற்றம் குறித்து பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என கோரப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, பணியிடமாற்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டாா். மேலும், இந்த மனுவுக்கு இரு வாரங்களில் அரசுத் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.