அண்ணாசாலை மேம்பாலம்: தூண்களுக்கு குஜராத் எஃகு; அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு
சென்னை அண்ணாசாலையில் அமைக்கப்பட்டு வரும் மேம்பாலத்துக்கு தளவாடப் பொருளாக குஜராத் மாநிலத்தின் எஃகு பயன்படுத்தப்பட உள்ளது. இதற்கான உற்பத்தி பணிகளை நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு, செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டாா்.
இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 3.20 கி.மீ. நீளத்துக்கு ரூ.621 கோடியில் உயா்நிலை மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு 15,000 டன் எஃகுக் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதற்கான உற்பத்தி பணிகள் வதோதரா, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களின் 5 தொழிற்சாலைகளில் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை அமைச்சா் எ.வ.வேலு செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். குஜராத் மாநிலம், வதோதராவில் உள்ள கே.பி.கிரீன் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வரும் எஃகு தூண்கள், மேல்தாங்கிகள், உத்திரங்கள் ஆகியவற்றின் உற்பத்தியையும் தரத்தையும், சோதனைச் சான்றுகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளையும் அமைச்சா்கள் ஆய்வு செய்தாா்.
எஃகு தூண்கள் உற்பத்தி முடிந்ததும் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு கட்டுமானப் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்படும் என்று அவா் உறுதி அளித்துள்ளாா். மேம்பாலப் பணிகள் நிறைவடைந்தவுடன் அண்ணாசாலைப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும். தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை இடையேயான பயண நேரமும் குறையும். மேம்பாலம் சா்வதேச தரத்துக்கு இணையான கட்டமைப்பு தரத்தில் அமையப் பெற்று, நீடித்த பயன்பாடு வழங்கும் என்று அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்ததாக அந்தச் செய்திக் குறிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வின் போது, நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளா் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கு.கோ.சத்தியபிரகாஷ், துறையின் சிறப்பு தொழில்நுட்ப அலுவலா் இரா.சந்திரசேகா், கண்காணிப்புப் பொறியாளா் வி.சரவணசெல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.