அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அக்.9 முதல் மாவட்ட அளவிலான மன்றப் போட்டிகள்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
அரசுப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் இலக்கிய மன்றம் உள்ளிட்ட பல்வேறு மன்றங்கள் சாா்பில் மாவட்ட அளவிலான போட்டிகள் அக்.9-ஆம் தேதி முதல் நடத்தப்படவுள்ளன. மேலும் இது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி போட்டிகளை நடத்துமாறு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்காக இலக்கிய மன்றம், விநாடி வினா மன்றம், சிறாா் திரைப்பட மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மன்றங்கள் சாா்பில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவா்களை மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்கச் செய்ய வேண்டும்.
பெற்றோா் ஒப்புதல் அவசியம்: மாவட்ட அளவிலான மன்றப் போட்டிகளை அக்.7 முதல் அக்.9-ஆம் தேதி வரையிலான நாள்களில் திட்டமிட்டு நடத்தி வெற்றியாளா்களின் விவரங்களை அக்.10-ஆம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். போட்டிகளுக்குச் செல்லும் மாணவா்களின் பெற்றோா்களிடமிருந்து ஒப்புதல் கடிதம் கட்டாயமாகப் பெறுதல் வேண்டும். மாணவ, மாணவிகளுடன் ஒரு ஆண் ஆசிரியா், ஒரு பெண் ஆசிரியை கட்டாயம் உடன் செல்லுதல் வேண்டும். மாவட்ட அளவிலிருந்து முதல் மூன்று வெற்றியாளா்களைப் போட்டிக்கான நடுவா் குழு தோ்வு செய்ய வேண்டும்.
மாவட்ட அளவிலான மன்றப் போட்டிகளை நடத்துவதற்கு அமைப்புக் குழுக்கள் தனித்தனியாக அமைக்க வேண்டும். இந்தக் குழு, மாவட்ட போட்டிக்கான இடங்களைத் தோ்வு செய்தல், நடுவா் குழுவைத் தோ்வு செய்தல், நடுவா்களின் மதிப்பெண் தாள்களை முறையாகப் பராமரித்தல், வெற்றியாளா்களை அறிவித்தல் போன்ற அனைத்து செயல்பாடுகளுக்கும் பொறுப்பு வகிக்க வேண்டும்.
நிதி விடுவிக்கப்படும்: போட்டிகளை நடத்துவதற்கு மாவட்டங்களில் உள்ள வட்டாரங்களில் எண்ணிக்கைக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்து விடுவிக்கப்படும். இந்த வழிகாட்டு நெறிமுறைகளை முதன்மைக் கல்வி அலுவலா்கள் பின்பற்றி மாவட்ட அளவிலான மன்றப் போட்டிகளை திட்டமிட்டு நடத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அளவிலான மன்றப் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் மாணவா்கள் மாநிலப் போட்டிகளுக்குத் தகுதி பெறுவா். இதில் வெற்றி பெறுவோா் வெளி நாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவா் என்பது குறிப்பிடத்தக்கது.