
பெண்கள் ஆட்டோ/டாக்ஸியில் தனியாக குறிப்பாக இரவு நேரங்களில் பயணிக்கும்போது அதிக சவால்களை எதிர்கொள்வதுடன் அதிக அழுத்தத்திற்கும் ஆளாகிறார்கள்.
பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பாதுகாப்பு வழிமுறைகளை எவ்வளவு பலப்படுத்தினாலும் பெண்கள் தனியாகச் செல்வது இந்த சமூகத்தில் சவாலாகவே இருக்கிறது.
குறிப்பாக நகரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் ஆட்டோ/டாக்ஸியில் தனியாகச் செல்லும்போது பல அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள்.
பெண்கள் வீட்டில் இருந்து கல்வி நிறுவனத்துக்கோ அல்லது வேலை செய்யும் பணியிடத்துக்கோ செல்லும்போது குறிப்பாக இரவு நேரங்களில் செல்லும்போது முன்னெச்சரிக்கையுடனே இருக்கின்றனர்.(இருக்க வேண்டும்)
அண்மையில் 22 வயது மாணவி ஒருவர், ஆட்டோவில் பயணிக்கும்போது சுயஇன்பம் செய்து பாலியல் அச்சுறுத்தல் செய்த ஆட்டோ டிரைவர் கைதான சம்பவம், பெண்கள் தனியே பயணிப்பதற்கான சவால்கள் இன்னும் இருப்பதையே காட்டுகிறது.
பாதுகாப்பு வழிமுறைகள்
இதுபோன்ற பிரச்னைகளில் இருந்து தப்பிக்க...
ஆட்டோவில் ஏறிய உடனே ஆட்டோ எண் மற்றும் ஓட்டுநர் குறித்த விவரங்களை நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் பகிர்வது முதல் பாதுகாப்பாகும்.
மேலும், பெற்றோருக்கோ அல்லது நண்பர்களுக்கோ போன் செய்து, தான் பயணிக்கும் விவரங்களை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் அல்லது வாய்ஸ் மெசேஜ் மூலமாக எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என அவ்வப்போது அப்டேட் கொடுக்கலாம்.
தொடர்ந்து குடும்பத்தினருடன் போனில் பேசிக்கொண்டிருக்கும்போது ஆட்டோ ஓட்டுநர்களும் விழிப்புடன் இருப்பார்கள், அச்சுறுத்தலில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும்.
காவல்துறையின் எஸ்ஓஎஸ் செயலியை கண்டிப்பாக மொபைல்போனில் வைத்திருக்க வேண்டும். அதை எப்போதும் லாக்-இன் செய்தும் வைத்திருக்க வேண்டும். அதில் நெருங்கிய உறவினர்களின் மொபைல் எண் சேமிக்கப்பட்டிருக்க வேண்டும்.
பயணத்தின்போது பிரச்னை ஏற்படும்பட்சத்தில் எஸ்ஓஎஸ் செயலியில் உள்ள பட்டனை அழுத்தும்பட்சத்தில் உடனடியாக காவல்துறைக்கு நீங்கள் பயணிக்கும் இடம் உள்ளிட்ட தகவல்கள் சென்றுவிடும். அதேபோல செயலியில் இருக்கும் நெருங்கிய உறவினர்களின் மொபைல் எண்களுக்கும் குறுஞ்செய்தி சென்றுவிடும். அவர்களும் நீங்கள் இருக்கும் இடத்திற்கு வந்துவிடுவார்கள்.
எது பாதுகாப்பு?
பெண்கள் பெரும்பாலும் டாக்ஸியைவிட ஆட்டோவில் செல்வதை பாதுகாப்பாக உணர்கின்றனர். ஏனெனில் ஆட்டோவில் பிரச்னை என்றால் உடனடியாக கீழே குதித்துவிடலாம். சில காயங்களுடன் துன்புறுத்தலில் இருந்து தப்பிவிடலாம்.
கடந்த வியாழக்கிழமை குருகிராமில் ஃபெரோஸ் காந்தி காலனி அருகே ஆட்டோ ஓட்டுநரின் பாலியல் அச்சுறுத்தலில் இருந்து தப்பிக்க, ஓடும் ஆட்டோவிலிருந்து 42 வயது பெண் ஒருவர் குதித்த சம்பவம் அதிகம் பேசப்பட்டது.
பெண்கள் பலரும் தாங்கள் பயணிக்கும் ஆட்டோ/டாக்ஸி விவரங்களை குடும்பத்தினருடன் எப்போதும் பகிர்ந்துவிடுவதாகவும் பாதுகாப்புக்காக எஸ்ஓஎஸ் செயலியை திறந்து வைத்திருப்பதாகவும் கூறுகிறார்கள்.
பாதுகாப்பு கருதி டாக்ஸியைவிட ஆட்டோவில் பயணிப்பதை விரும்புவதாகக் கூறும் பெண்கள், பாதுகாப்பாக உணராத பட்சத்தில் தங்கள் குடும்பத்தினருக்கு போன் செய்து பேசிக்கொண்டே வருவதாகவும் இல்லை யாருடனோ பேசிக்கொண்டே வருவது போல நடிப்பதாகவும் அதேபோல ஊசியான பேனா, சிறிய கத்தி, பெப்பர் ஸ்பிரே ஆகியவற்றை ஹேண்ட்பேக்கில் வைத்திருப்பதாகவும் கூறுகின்றனர்.
தனியாக பயணிக்கும் அனைத்து பெண்களும் கைப்பையில் பாதுகாப்பு உபகரணங்களை வைத்திருக்க வேண்டும் என்றும் பெண்களே வலியுறுத்துகிறார்கள்.
மேலும், ஆட்டோ டிரைவர் சரியான வழியில் சொல்கிறாரா என்பதை அறிய கூகுள் மேப்பை திறந்து வைத்திருக்கிறார்கள். வேறு வழியில் செல்லும்பட்சத்தில் கேள்வி எழுப்புகிறார்கள். வேலைக்காக நகரத்திற்கு புதிதாக வந்திருந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்வதில்லையாம். இரவில் தனியாக பயணிக்கும்போது லேசான பயம் இருந்தாலும் பயத்தை மறைக்கும்விதமாக நடந்துகொள்கிறார்கள்.
ஏனெனில் சமீபமாக ஒரு தனியார் நிறுவனத்தின் பணிபுரியும் பெண், அந்த நிறுவனம் அனுப்பிய டாக்ஸியிலே பாலியல் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளார்.
அதனால் எந்த நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் பெண்கள் குறிப்பாக இரவு நேரங்களில் பயணிக்கும்போது கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதையும் படிக்க | காஸா மக்களுக்கு ஆதரவாக இத்தாலியில் வெடித்த போராட்டம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.