
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை நேரில் சந்தித்ததாக வெளியான தகவலுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அனைவரையும் மீண்டும் இணைக்க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார்.
இதனிடையே, தில்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரையும் செங்கோட்டையன் சந்தித்தார்.
இந்த நிலையில், திடீர் பயணமாக கோவையில் இருந்து புதன்கிழமை சென்னைக்கு வந்த செங்கோட்டையன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை நேரில் சந்தித்ததாக தகவல்கள் பரவியது.
இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களுடன் பேசுகையில் செங்கோட்டையன் தெரிவித்ததாவது:
”சென்னையில் எனது மனைவி சிகிச்சைப் பெற்று வருகிறார். அதற்காகதான் நேற்று சென்னை சென்றுவிட்டு, மீண்டும் வீடு திரும்பியுள்ளேன். அரசியல் ரீதியாக யாரையும் சந்திக்கவில்லை.
கட்சியின் ஒருங்கிணைப்பு பணிக்காக பல்வேறு நண்பர்கள் என்னுடன் பேசியுள்ளனர். அனைவரின் மனதிலும் ஒருமித்த கருத்துகள் இருக்கின்றன. யார் என்னிடம் பேசினார்கள் என்பதை வெளியிட முடியாது? இன்றுவரை நான் கூறியதற்கு யாரும் மறுப்பு தெரிவிக்காமல் இருப்பது, அனைவருடைய மனதிலும் ஒன்றிணைந்து வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இருப்பதை பிரதிபலிக்கிறது” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.