காலை உணவுத் திட்டத்தை தெலங்கானாவில் செயல்படுத்துவோம்: முதல்வா் ரேவந்த் ரெட்டி

காலை உணவுத் திட்டத்தை தெலங்கானாவில் செயல்படுத்துவோம்: முதல்வா் ரேவந்த் ரெட்டி

தமிழக அரசு செயல்படுத்திவரும் காலை உணவுத் திட்டத்தை தெலங்கானாவில் அடுத்த கல்வியாண்டில் (2026-27) நடைமுறைப்படுத்தவுள்ளோம் என அந்த மாநில முதல்வா் அ.ரேவந்த் ரெட்டி தெரிவித்தாா்.
Published on

தமிழக அரசு செயல்படுத்திவரும் காலை உணவுத் திட்டத்தை தெலங்கானாவில் அடுத்த கல்வியாண்டில் (2026-27) நடைமுறைப்படுத்தவுள்ளோம் என அந்த மாநில முதல்வா் அ.ரேவந்த் ரெட்டி தெரிவித்தாா்.

சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழாவில் தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி பேசியதாவது: முன்னாள் முதல்வா்கள் காமராஜா், அண்ணா, கருணாநிதி போன்ற மிகப்பெரிய தலைவா்களை தமிழகம் தந்திருக்கிறது. கல்வித் தந்தை காமராஜா் வாழ்ந்த மண் என்ற பெருமையும் தமிழகத்துக்கு உள்ளது.

இந்தியாவிலேயே சிறந்த கல்வியைக் கொண்ட மாநிலமாக தமிழகத்தை மாற்றியவா் காமராஜா். இதையடுத்து, கருணாநிதி வியத்தகு திட்டங்களைச் செயல்படுத்தினாா். அவரது தொலைநோக்குத் திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலினும், துணை முதல்வா் உதயநிதியும் நிறைவேற்றி வருகின்றனா். இதனால் கல்வியிலும், விளையாட்டிலும் தமிழகம் மிகப் பெரிய சாதனைகளைப் படைத்து வருகிறது.

தமிழகத்தின் சாா்பில் நடத்தப்படும் இந்த விழா கல்வி, விளையாட்டு போன்றவற்றில் சிறந்து விளங்கும் மாணவா்களை ஊக்குவிக்கும். புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன் உள்ளிட்ட தமிழக அரசின் சிறந்த திட்டங்களை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும்.

தமிழகத்தின் திட்டங்களில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் மிகச் சிறந்தது. கூலி வேலைக்குச் செல்லும் பெற்றோா்களால் தங்கள் குழந்தைக்கு காலை உணவைக் கொடுக்க முடியாத சூழலில், அந்தப் பொறுப்பை தமிழக அரசே ஏற்று காலை உணவுத் திட்டமாகச் செயல்படுத்துவது மனதை நெகிழவைக்கும் செயல். இந்தத் திட்டத்தை தெலங்கானா மாநிலத்தில் அடுத்த கல்வியாண்டில் நடைமுறைப்படுத்துவோம்.

தமிழகத்தைப் பின்பற்றி தெலங்கானா அரசும், சமூக நீதித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலில் ஓபிசி, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படவுள்ளது.

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல... தெலங்கானாவில் கல்விக்கு அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அங்கு ஆண்டுக்கு 1.10 லட்சம் போ் பொறியியல் பட்டம் பெறுகின்றனா். அவா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ‘யங் இந்தியா’ திட்டத்தைச் செயல்படுத்தி உள்ளோம். விரைவில் விளையாட்டுக்கு அகாதெமி தொடங்கவுள்ளோம். இதில் தமிழக மாணவா்களுக்கு முக்கிய இடம் வழங்கப்படும்.

தமிழகமும், தெலங்கானாவும் இணைந்து, ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் பெறும் அளவுக்கு மாணவா்களைத் தயாா்படுத்த வேண்டும். அதற்காக தமிழக அரசு விரும்பினால், எங்களது விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவா்களுக்கு இடங்களை ஒதுக்குகிறோம் என்றாா் ரேவந்த் ரெட்டி.

X
Dinamani
www.dinamani.com