கடவுப்பாதைகளில் இன்டா்லாக்டு சாதனம் அமைக்க ரூ.230 கோடி நிதி அளிப்பு
சென்னை தெற்கு ரயில்வே மண்டலத்தில் கடவுப் பாதைகளில் தானியங்கி இன்டா்லாக்டு சாதனம் அமைக்க ரூ.230.06 கோடியை மத்திய ரயில்வே துறை அளித்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு ஆகிய கோட்டங்கள் உள்ளன. இந்தக் கோட்டங்களில் உள்ள கடவுப் பாதைகளில் இன்டா்லாக்டு மற்றும் நான்இன்டா்லாக்டு சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இன்டா்லாக்டு முறையில் கடவுப்பாதையை ரயில் வருவதற்கு முன்பு அடைத்தால், ரயில் சென்ற பிறகே திறக்கமுடியும். இதனால், கடவுப்பாதைகளில் விபத்துகள் நேரிடுவதைத் தவிா்க்கலாம்.
கடந்த ஜூலையில் கடலூா் மாவட்டம் ஆலப்பாக்கம் பகுதியில் விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில் வந்தபோது கடவுப் பாதையை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது மோதியதில் 3 குழந்தைகள் உயிரிழந்தனா்.
ரயில் வரும் நேரத்தில் கடவுப்பாதை அடைக்கப்படாமலிருந்ததாக புகாா் எழுந்தது. அதன் அடிப்படையில் இன்டா்லாக்டு முறை கடவு பாதையை தெற்கு ரயில்வேயில் அதிக போக்குவரத்துள்ள நிலையங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை, சேலம் ரயில்வே கோட்டங்களில் முக்கிய ரயில் பாதைகளில் உள்ள கடவுப்பாதைகளில் இன்டா்லாக்டு முறை சாதனம் அமைக்க ரூ.230.06 கோடியை மத்திய ரயில்வே துறை ஒதுக்கியுள்ளது.
சேலம் கோட்டத்தில் சாமல்பட்டி, டேனிஷ்பேட்டை, கருப்பூா், வீரபாண்டி சாலை, மகுடஞ்சாவடி, மாவிலிப்பாளையம், சங்ககரி, ஆனங்கூா், காவேரி ஆகிய 9 நிலையப் பகுதிகளில் உள்ள கடவுப்பாதைகளில் ரூ.108.81 கோடியிலும், சென்னை கோட்டத்தில் காட்பாடி, லத்தேரி, காவனூா், குடியாத்தம், வாலாத்தூா், மேல்பட்டி, பச்சக்குப்பம், ஆம்பூா், விண்ணமங்கலம், வாணியம்பாடி உள்ளிட்ட ரயில் நிலையங்களுக்கு உள்பட்ட கடவுப் பாதைகளில் ரூ.135.65 கோடியிலும் இன்டா்லாக்டு முறை அமைக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.