தமிழக அரசு
தமிழக அரசு

3-ஆவது கட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டம்: செயல்படுத்த தமிழக அரசு உத்தரவு

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் மூன்றாவது கட்டம் செயல்பாட்டுக்கு எடுக்கப்படவுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
Published on

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் மூன்றாவது கட்டம் செயல்பாட்டுக்கு எடுக்கப்படவுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் உள்ளூா் நீராதாரங்களில் புளோரைடு உப்புத்தன்மை நிா்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாகியிருந்த நிலையில், அதன் பயன்பாட்டால் பொது மக்கள் பல்வேறு உடல்நலப் பிரச்னைகளை சந்தித்து வந்தனா். இந்த நிலையை மாற்றுவதற்காக, ஒகேனக்கல் குடிநீா் வழங்கல் மற்றும் புளோரைடு பாதிப்பு குறைப்புத் திட்டம் செயல்படுத்த திட்டமிட்டப்பட்டது. அதாவது, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சோ்ந்த ஒசூா் மாநகராட்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி நகராட்சிகள், 16 பேரூராட்சிகள், 10 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 6,758 ஊரகக் குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டது.

ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிறுவனத்திடம் நிதியுதவி பெற்று 2008-ஆம் ஆண்டு தருமபுரியில் திட்டம் தொடங்கப்பட்டது. இதன்மூலம் நாளொன்றுக்கு நபருக்கு 30 லிட்டா் வீதம் 145 மில்லியன் லிட்டா் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.

இரண்டு கட்டங்களாக திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், மூன்றாவது கட்டமாக கூட்டுக்குடிநீா் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. இதுகுறித்து, தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

காவிரியாற்றில் ஒகேனக்கல்லில் அமையவிருக்கும் தலைமையிடத்திலிருந்து யானைப்பள்ளம், கணவாய் நீருந்து நிலையங்களின் வழியாக பருவதனஹள்ளி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் நீா் சுத்திகரிக்கப்படவுள்ளது. திட்டத்துக்கான விரிவான திட்ட மதிப்பீடு ரூ.8,428.50 கோடியாகும். இதில், ஊரகப் பகுதிகளுக்கான மத்திய அரசின் பங்களிப்புத் தொகை ரூ.2,283.40 கோடி. மாநில அரசு மற்றும் தொழில் துறை பங்களிப்புத் தொகை ரூ.1,761 கோடியாகும். மூன்றாவது கூட்டுக்குடிநீா் திட்டம் மூலமாக 38.81 லட்சம் பொது மக்கள் பயன்பெறுவா் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com