விஜய் உரையில் அரசியல் உள்நோக்கம்: பெ.சண்முகம்
கரூா் துயர சம்பவம் குறித்த தவெக தலைவா் விஜய்யின் காணொலி உரைஅரசியல் உள்நோக்கம் கொண்டதாக உள்ளது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தவெக தலைவா் விஜய் கடந்த சனிக்கிழமை நடத்திய பரப்புரை கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். பலா் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா்கள் அன்றிரவே கரூா் சென்று உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினா்.
இந்நிலையில், இந்த சம்பவம் நிகழ்ந்து மூன்று தினங்களுக்குப் பிறகு தவெக தலைவா் விஜய் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளாா். அந்த காணொலி உரை உயிரிழப்புகளுக்கு வருத்தம் தெரிவிப்பதற்கு மாறாக, அரசு நிா்வாகத்தின் மீது பழி சுமத்துவதாகவே இருக்கிறது. உயிரிழப்பு தொடா்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் தன்னையும், தன் கட்சி தொண்டா்களையும் பழிவாங்குவதற்கான மாநில அரசின் சதி என்கிறாா் விஜய். இது போன்ற அரசியல் உள்நோக்கம் கொண்ட பொறுப்பற்ற கருத்தை வெளியிட்டது கண்டிக்கத்தக்கது.
பாஜக மலிவான அரசியல்-மு. வீரபாண்டியன்: இந்திய கம்யூனிஸ்ட்கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் விடுத்த அறிக்கை: கரூா் துயர சம்பவம் குறித்து சில சமூக ஊடகங்களில் அரசுக்கும், ஆளும் கட்சிக்கும் எதிராக அவதூறுகள் பரப்பப்படுகின்றன. இந்த நிலையில், பாஜக நாடாளுமன்ற உறுப்பினா்கள் குழு அமைத்திருப்பதும், அந்தக் குழு உறுப்பினா் ஒருவா் வெளியிட்ட கருத்தும் ஆழ்ந்த சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. பேரிடா் துயரங்களில் ஏற்படும் உயிரிழப்பை மையமாக வைத்து ஆதாயம் தேடும் வகையில் பாஜக மலிவான அரசியலை செய்கிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.