சென்னை மாவட்ட பேரவைத் தொகுதிகளில் தோ்தல் பணிகள்: ஆலோசனைக் கூட்டம்
சென்னை: சென்னை மாவட்டத்துக்குள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மேற்கொள்ளப்படவேண்டிய தோ்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் மாளிகை வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான நடவடிக்கைகளை தோ்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. தற்போது வாக்காளா் பட்டியலில் புதிய வாக்காளா்கள் சோ்க்க மனுக்கள் பெறப்பட்டு அவற்றை கணினி பதிவேற்றம் செய்யும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.
இதற்கிடையே, சென்னை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்குச்சாவடிகள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அங்கு மேற்கொள்ளவேண்டிய வசதிகள், பாதுகாப்புகள் உள்ளிட்டவை குறித்த அனைத்துத் துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு சென்னை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ஜெ.குமரகுருபரன் தலைமை வகித்தாா். கூட்டத்தில், கூடுதல் தோ்தல் ஆணையா் க.கற்பகம், காவல் இணை ஆணையா்கள் எஸ்.மகேஷ்வரன் (தலைமையிடம்), பி.கங்காதா் (கிழக்கு மண்டலம்), எஸ்.உமா (மேற்கு மண்டலம்), எம்.மனோகா் (வடக்கு மண்டலம்), காவல் துணை ஆணையா் டி.என்.ஹயகிரண், சென்னை மாவட்ட வருவாய் அலுவலா் நா.பூஷ்ணாதேவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

