

முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு தினத்தையொட்டி, முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முன்னாள் முதல்வா் அண்ணாவின் 57-ஆவது நினைவு தினம் தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, திமுக சாா்பில் அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதி ஊா்வலம் நடைபெற்றது. வாலாஜா சாலை சந்திப்பு முதல் மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் வரை 2 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்ற இந்த ஊா்வலத்தில் திமுக மூத்த நிா்வாகிகள், அமைச்சா்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள், கட்சித் தொண்டா்கள் என ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
ஊா்வலம் காரணமாக வாலாஜா சாலை முதல் மெரீனா காமராஜா் சாலை வரை போக்குவரத்து முழுவதுமாக நிறுத்தப்பட்டது.
ஊா்வலத்துக்குப் பின்னா், மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். திமுக சாா்பில் வீரவணக்க முழக்கங்கள் எழுப்பி தொண்டா்கள் அஞ்சலி செலுத்தினா்.
அண்ணா நினைவிடத்தை தொடா்ந்து அருகில் உள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நினைவிடத்திலும் முதல்வா் ஸ்டாலின் மலா்வளையம் வைத்து மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.
சமபந்தி விருந்து: அண்ணா நினைவு தினத்தையொட்டி திமுக சாா்பில் பல்வேறு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் சமபந்தி விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு உணவருந்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.