எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு கூட்டணி அமைக்க தேமுதிக ஏன் தாமதம் செய்கிறது என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பதில் அளித்துள்ளார்.
தமிழகம் முழுவதும், தேமுதிகவின் ‘உள்ளம் தேடி, இல்லம் நாடி’ என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்த பிரேமலதா விஜயகாந்த், கன்னியாகுமரி மாவட்டத்தில் தனது சுற்றுப்பயணத்தை திங்கள்கிழமை இரவு குழித்துறையில் நிறைவு செய்தார்.
சென்னைக்கு வந்தவுடன் மாவட்டச் செயலாளர்கள் உடன் ஆலோசனை செய்தவுடன் கூட்டணி நிலைப்பாடு குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் பிப். 3 ஆம் தேதி கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று பிரேமலதா முன்னதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “நீங்கள் கேட்ட கூட்டணி குறித்த அறிவிப்பு விரைவில் தெரிவிக்கப்படும். நான் கூறுவதற்கு முன்பே மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் என்ற செய்தி வெளியாகியிருக்கிறது. அப்போது, நான் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்தேன்.
இதுபோன்ற தவறான செய்தியை வெளியிட வேண்டாம். கூட்டணி குறித்து தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். உரிய நேரத்தில் விருப்ப மனு, மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் என அனைத்தும் அறிவிக்கப்படும். வரும் பிப். 12 ஆம் தேதி தேமுதிக கொடி நாள் கொண்டாடப்படும்” என்றார்.
தேமுதிக கூட்டணி அமைக்க தாமதம் செய்வது ஏன் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த், “ கூட்டணி குறித்து எங்கள் கட்சிக்கும் எதிர்காலத்துக்கும் சேர்த்து முடிவு எடுக்கிறோம். தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கவில்லை.
இரண்டு பெரிய கட்சிகள் கூட்டணியை, இன்னும் இறுதி செய்யவில்லை, தேமுதிகவிடம் மட்டும் ஏன் தொடர்ந்து இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள்? தொண்டர்கள், நிர்வாகிகள் விருப்பப்படி மகத்தானக் கூட்டணி அமைக்கப்படும். உரிய நேரத்தில் கூட்டணி குறித்து தேமுதிகவின் நிலைப்பாடு தெரிவிக்கப்படும்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.