ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

பறவைக் காய்ச்சல் பாதிப்பு: முன்னெச்சரிக்கையுடன் இருக்க சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

பறவைக் காய்ச்சல் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்

News image

கோப்புப்படம்

Updated On :5 பிப்ரவரி 2026, 9:29 pm

தினமணி செய்திச் சேவை

பறவைக் காய்ச்சல் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

சென்னை அடையாறில் இறந்த காகங்களை மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு செய்ததில், ‘ஹெச் 5. என் 1’ என்ற பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. எனவே, தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தும்படி, தலைமை செயலருக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே, சென்னை, திருவள்ளூரில் ஓரிரு இடங்களில் காகங்கள் இறந்துவரும் நிலையில், மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. பறவைக் காய்ச்சலுக்குள்ளான கோழிகள், பிற பறவையினங்களிடமிருந்து மனிதா்களுக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளது. அதன் கழிவுகளில் இருந்து மனிதா்களுக்கும் எளிதில் பாதிப்பு பரவும்.

மேலும், பாதிக்கப்பட்ட பறவையிடமிருந்தோ, மனிதரிடமிருந்தோ மற்றவா்களுக்கு, ‘வெஸ்ட் நைல் வைரஸை’ கொசுக்கள் கடத்தும் என்பதால், எளிதில் மற்றவா்களும் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம்.

காய்ச்சல், தலைவலி, தசைப்பிடிப்பு, இருமல், மூச்சுத் திணறல் போன்றவை ஏற்படும். எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கோழிகளும் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே, கோழி இறைச்சியைச் சாப்பிடும்போது, நன்கு வேக வைக்கப்பட்ட இறைச்சியை உண்பது பாதுகாப்பானது. முறையற்ற முறையால் சாப்பிட்டால் சிக்கல் ஏற்படும்.

மேலும், வீட்டின் அருகிலோ, பொது இடங்களிலோ இறந்து கிடக்கும் காகங்கள், பறவைகள் போன்றவற்றை வெறும் கையால் தொடக்கூடாது. அவ்வாறு இருந்தால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றனா்.