பறவைக் காய்ச்சல் பாதிப்பு: முன்னெச்சரிக்கையுடன் இருக்க சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

பறவைக் காய்ச்சல் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on

பறவைக் காய்ச்சல் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

சென்னை அடையாறில் இறந்த காகங்களை மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு செய்ததில், ‘ஹெச் 5. என் 1’ என்ற பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. எனவே, தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தும்படி, தலைமை செயலருக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே, சென்னை, திருவள்ளூரில் ஓரிரு இடங்களில் காகங்கள் இறந்துவரும் நிலையில், மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. பறவைக் காய்ச்சலுக்குள்ளான கோழிகள், பிற பறவையினங்களிடமிருந்து மனிதா்களுக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளது. அதன் கழிவுகளில் இருந்து மனிதா்களுக்கும் எளிதில் பாதிப்பு பரவும்.

மேலும், பாதிக்கப்பட்ட பறவையிடமிருந்தோ, மனிதரிடமிருந்தோ மற்றவா்களுக்கு, ‘வெஸ்ட் நைல் வைரஸை’ கொசுக்கள் கடத்தும் என்பதால், எளிதில் மற்றவா்களும் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம்.

காய்ச்சல், தலைவலி, தசைப்பிடிப்பு, இருமல், மூச்சுத் திணறல் போன்றவை ஏற்படும். எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கோழிகளும் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே, கோழி இறைச்சியைச் சாப்பிடும்போது, நன்கு வேக வைக்கப்பட்ட இறைச்சியை உண்பது பாதுகாப்பானது. முறையற்ற முறையால் சாப்பிட்டால் சிக்கல் ஏற்படும்.

மேலும், வீட்டின் அருகிலோ, பொது இடங்களிலோ இறந்து கிடக்கும் காகங்கள், பறவைகள் போன்றவற்றை வெறும் கையால் தொடக்கூடாது. அவ்வாறு இருந்தால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com