பிப். 10 வரை 9 மாவட்டங்களில் பனிமூட்டம்
வட தமிழக கடலோர மாவட்டங்கள், நீலகிரி, திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை (பிப். 7 முதல் பிப். 10 வரை) அதிகாலையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், லட்சத்தீவு அதையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், சனிக்கிழமை (பிப். 7) முதல் பிப். 12 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வட வானிலையே நிலவக்கூடும்.
சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை (பிப். 7 முதல் பிப். 10 வரை) வட தமிழக கடலோர மாவட்டங்கள், நீலகிரி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா், வேலூா், ராணிபேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலைல் மிதமான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில், சனிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலையில் ஓரிரு இடங்களில் மிதமான பனிமூட்டம் காணப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

