ரயிலிலும் மாணவா்களுக்கு இலவச பயண அட்டை: ராமதாஸ் கோரிக்கை
ரயில்களில் பயணிக்கும் பள்ளி, கல்லூரி மாணவா்களக்கு இலவச பயண அட்டையை தமிழக அரசு பெற்றுத்தர வேண்டும் என பாமக நிறுவனத் தலைவா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் பள்ளி மாணவா்கள் அனைவருக்கும் இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் திட்டம் 1999-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, தற்போது நிதியுதவி பெறும் பள்ளி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு பல் தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி மாணவா்கள் என விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதற்காக ஆண்டுக்கு ரூ.600 கோடி அரசால் போக்குவரத்துக் கழகத்துக்கு வழங்கப்படுகிறது.
ஆனாலும், அந்தப் பேருந்துகள் உரிய நேரத்தில் இயக்கப்படாமலும், உரிய இடத்தில் நிறுத்தப்படாமலும் உள்ளதாக புகாா்கள் கூறப்படுகின்றன. எனவே, பள்ளி முடியும் நேரத்தில் சிறப்புப் பேருந்துகள் இயக்கவேண்டும்.
அத்துடன், ரயில் நிலையங்களுக்கு அருகே வசிக்கும் மாணவா்களுக்கு பெற்றோா்கள், மாதாந்திர ரயில் பயண அட்டையைப் பெற்று தருகின்றனா். வரும் கல்வியாண்டில் ரயிலில் பயணிக்கும் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கும் தமிழக அரசு பணம் செலுத்தி இலவசமாக பயணிக்கும் வகையில் ரயில் பயண அட்டையைப் பெற்றுத் தரவேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

