

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைக் கண்டு தில்லி பயப்படுகிறது என்று எதிர்க்கட்சிகளுக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற தவெகவின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு செங்கோட்டையன் நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
“நான் ஏன் தவெகவுக்குச் சென்றேன் எனப் பலர் கேட்கிறார்கள். மனம் நொந்து போய் பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே என்னை தூக்கி வீசியதற்கு பிறகு, ஒரே நொடியில் என்னை தூக்கிவிட்டவர் விஜய். அவர் தளபதி அல்ல, நாளை தமிழகத்தை ஆளப் போகிற தலைவர்.
என் உடலில் ஓடும் ஒவ்வொரு துளி ரத்தமும் விஜய்யை கோட்டைக்கு அனுப்பும் வரை ஓயப் போவதில்லை. ஏழையின் கண்ணீரைத் தொடைப்பதற்காக ஆண்டுக்கு ரூ. 500 கோடி வருமானம் தேவையில்லை என்று மக்களுக்கு பணியாற்ற ஒரு தலைவர் தோன்றியுள்ளார்.
உலக நாடுகளில் உள்ள 3 லட்சம் தமிழர்கள் தலா ரூ. ஒரு லட்சம் செலவு செய்து விஜய்க்கு வாக்களிக்க தமிழகம் வரவுள்ளனர்.
விஜய் பேசினால் எதிர்க்கட்சிகளின் கதை முடிந்துவிடும். எதை, எப்போது, எங்கே பேச வேண்டுமோ அப்போது பேசுவார். பேசும் நாள் தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவே திரும்பிப் பார்க்கும் நாளாக அமையும். அவர் தமிழகத்தில் முதல்வரானால், உயிரோடு இருக்கும்வரை அவர்தான் முதல்வர்.
ஜனநாயகன் நிறுத்தப்பட்டாலும் பரவாயில்லை, ஜனநாயகத்தை காப்பாற்ற ஒரு தலைவர் வந்துள்ளார். தில்லி நம்மைக் கண்டு பயப்படுகிறது. ஏனெனில், விஜய்க்கு மட்டும் 42 சதவீதம் வாக்கு உள்ளது” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.