

திமுகவின் பெரும் பங்கு வாக்குகள் தவெகவுக்கு செல்லும் என பாமக தலைவர் அன்புமணி கணித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் அன்புமணி பேசுகையில் "தமிழகம், கடந்த 5 ஆண்டுகளில் மிகவும் மோசமான நிர்வாகத்தைக் கண்டுள்ளது. தமிழகத்தை 12 முதல்வர்கள் ஆட்சி செய்திருந்தாலும், மு.க. ஸ்டாலினின் ஆட்சிதான் மிக மோசமானதாக உள்ளது. அவரைச் சுற்றி 3 முதல் 4 அதிகாரத்துவவாதிகளும் 4 தொழிலதிபர்களும் உள்ளனர்.
மாநிலத்தில் அனைத்திலும் ஊழல், வசூல், கமிஷன். திமுக ஆட்சியால், சமூக நீதி புதைந்து விட்டது.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு மோசமாகி விட்டது. திமுக அரசின் மிகப்பெரிய தோல்வி என்னவென்றால், மாநிலத்தின் அனைத்து இடங்களிலும் போதைப் பொருள்கள் விற்பனை.
இந்த ஆட்சியில், மாநிலத்தில் 7,000 கொலைகள் நடந்துள்ளன. மாநிலத்தில் விவசாய வளர்ச்சி எதிர்மறையாக உள்ளது.
எதிர்க்கட்சிகள் துண்டுதுண்டாக பிரிந்திருந்ததால்தான், திமுக ஆட்சியைப் பெற்றது. ஆனால், இன்று நம்மிடம் வலுவான எதிர்க்கட்சி கூட்டணி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறி விட்டார்.
வரும் தேர்தலில் திமுக ஒற்றை இலக்கங்களில் மட்டுமே வெல்லும். தேசிய ஜனநாயகக் கூட்டணி 200 இடங்களுக்கும் மேலாக வெற்றி பெறும்.
குழப்பத்தை உண்டாக்கி, எதிர்க்கட்சிகளைப் பிரிக்க விரும்புகின்றனர் அவர்கள். பாட்டாளி மக்கள் கட்சியை உடைக்கவே முடியாது.
திமுக வாக்குகளில் பெரும் பங்கு, விஜய்யின் கட்சிக்குச் செல்லும் என்று தோன்றுகிறது. அது எங்கள் கூட்டணிக்கு பெரிய வெற்றி; திமுகவுக்கு பெரிய இழப்பு" என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.