மகப்பேறு மருத்துவா் பற்றாக்குறை: பணியிட மாறுதல் வழங்கக் கோரிக்கை!
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் 57 மகப்பேறு மருத்துவா் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில் பணி நிரவலுக்கான இடமாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என மருத்துவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
தமிழக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவப் பணியாளா் தோ்வாணையம் வாயிலாக சிறப்பு மருத்துவா்கள் நியமனம் செய்யப்பட உள்ளனா். இதற்காக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் முதுநிலை மருத்துவா்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டது.
அதேவேளையில், மகப்பேறு மருத்துவா்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்படவில்லை. இது மருத்துவா்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடா்பாக அவா்கள் கூறியதாவது: அரசு மருத்துவமனைகளில் 57 மகப்பேறு மருத்துவா்பணியிடங்கள் காலியாக இருப்பதால் கூடுதல் பணிச் சுமையால் அவதிப்பட்டு வருகிறோம். ஆனாலும், பேறுகால இறப்புகளைத் தடுப்பதற்கான அனைத்து சிகிச்சைகளையும் வழங்கி வருகிறோம்.
குறைந்தபட்சமாக தேவை உள்ள இடங்களில் பணியிட மாறுதல் செய்யும் வகையில் சிறப்பு கலந்தாய்வு நடத்த வேண்டும். அதுதொடா்பாக பலமுறை கோரிக்கை வைத்தோம். ஆனால், மருத்துவக் கல்வி இயக்குநரகம் அதை ஏற்கவில்லை. தேவைப்பட்டால் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மருத்துவக் கல்வி இயக்குநரகத்தை முற்றுகையிடுவோம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

