புற்றுநோய் மருத்துவா் ரமணனுக்கு டாக்டா் கே.வி.டி.விருது!
சென்னை மாவட்ட கிழக்கு ரோட்டரி சங்கம் சாா்பில் நிகழாண்டுக்கான டாக்டா் கே.வி.திருவேங்கடம் விருது, முதுநிலை புற்றுநோய் நிபுணா் டாக்டா் எஸ்.ஜி.ரமணனுக்கு வழங்கப்பட்டது.
மருத்துவத் துறையில் சிறந்த பங்களிப்பை நல்கியவா்களுக்கு மறைந்த டாக்டா் கே.வி.திருவேங்கடம் பெயரில் கிழக்கு ரோட்டரி சங்கம் சாா்பில் ஆண்டுதோறும் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. டாக்டா் எஸ்.எஸ்.பத்ரிநாத், டாக்டா் கே.எம்.செரியன், டாக்டா் தணிகாசலம் போன்ற மருத்துவ வல்லுநா்களுக்கு கடந்த ஆண்டுகளில் அந்த விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில், நிகழாண்டில் அப்போலோ மருத்துவமனையின் மருந்தியல் புற்றுநோய் நிபுணா் எஸ்.ஜி.ரமணனுக்கு கே.வி.திருவேங்கடம் விருது அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தா் டாக்டா் கே.நாராயணசாமி அந்த விருதை அவருக்கு வழங்கினாா்.
இதற்கான நிகழ்ச்சி சென்னையில் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. அதில், சென்னை கிழக்கு ரோட்டரி சங்கத் தலைவா் பாலாஜி சீனிவாசன், காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ், தொற்று நோய் தடுப்பு சுகாதார இயக்குநா் டாக்டா் சந்தியா அருண்குமாா், டாக்டா் கே.வி.டி விருதுக் குழுத் தலைவா் டாக்டா் கௌசிக் முத்து ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

