

பட்ஜெட்டில் ‘ஜீரோ’ கொடுத்தால் கைகட்டி வேடிக்கை பார்ப்போம் என நினைத்தார்களா? என முதல்வர் ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.
2026 - 2027ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில், சுமார் ரூ. 50 லட்சம் கோடிக்கு மேல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தமிழகத்துக்குப் போதிய அளவிலான நிதி ஒதுக்கப்படவில்லை.
இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு போதிய நிதி ஒதுக்காததைக் கண்டித்து சென்னையில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொண்டன.
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதற்கு எதிராகவும் நூறு நாள் வேலையை ஒழிக்கும் சட்டம், விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என மத்திய பாஜக அரசையும் அதனுடன் கூட்டணியில் உள்ள அதிமுகவையும் கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “பட்ஜெட்டில் “ஜீரோ” கொடுத்தால் கைகட்டி வேடிக்கை பார்ப்போம் என்று நினைத்தார்களா? தமிழ்நாட்டுக்கு வஞ்சனை செய்வதை மட்டுமே எண்ணமாகக் கொண்டு செயல்படும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் திரண்டு தமிழ்நாட்டு மக்களின் குரலாகக் கேள்வி கேட்டுள்ளது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி!
தமிழ்நாட்டுக்கான நிதிகளை மறுத்து அநீதியை இழைக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு “ஜீரோ”-வைத் திருப்பியளிப்போம்!
தமிழ்நாடு vs தேசிய ஜனநாயகக் கூட்டணி எனும் இந்த ஜனநாயகப் போரில் தமிழ்நாடு தலைகுனியாது! தமிழ்நாடு வெல்லட்டும்! வெல்வோம் ஒன்றாக!” எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.