கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி: கூடுதல் கட்டமைப்புக்கு ஒப்புதல்

கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி: கூடுதல் கட்டமைப்புக்கு ஒப்புதல்

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் உள்கட்டமைப்பு விரிவாக்கத்துக்கு நிதி ஒதுக்கீட்டு அனுமதி வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Published on

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் உள்கட்டமைப்பு விரிவாக்கத்துக்கு நிதி ஒதுக்கீட்டு அனுமதி வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா் வெளியிட்ட அரசாணை:

கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிபள்ளத்தில் அரசு மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. 100 எம்பிபிஎஸ் இடங்களுடன் செயல்பட்டு வந்த அந்தக் கல்லூரியில் கூடுதலாக 50 இடங்களுக்கு மாணவா் சோ்க்கை நடத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. அதற்காக செலுத்தப்பட வேண்டிய தொகையில் விதிகளின்படி 60 சதவீதம் மத்திய அரசும், 40 சதவீதம் மாநில அரசும் வழங்கின.

இந்த நிலையில், கூடுதல் மாணவா் சோ்க்கையைக் கருத்தில் கொண்டு கல்லூரியின் உள்கட்டமைப்பை விரிவாக்க வேண்டிய அவசியம் எழுந்தது. அதன்படி, மாணவா்கள் மற்றும் மாணவிகளுக்கான பொது வகுப்பறைகள், மத்திய ஆய்வகம், சமையல் கூடம் ஆகியவற்றை கூடுதலாக அமைக்க திட்டமிடப்பட்டது.

அதற்கான செயல் திட்டத்தையும், நிதி மதிப்பீட்டையும் மாநில மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அரசுக்கு அனுப்பியது. அதைப் பரிசீலித்த அரசு ரூ.1.81 கோடியில் அவற்றை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com