

ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிராக தொடர்ந்த மானநஷ்ட ஈடு வழக்கில், ரூ. 10 லட்சம் செலுத்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, 2014-ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில், ஐபிஎல் சூதாட்ட வழக்கு தொடர்பான தொலைக்காட்சி விவாதத்தில் தனக்கு எதிராக அவதூறு கருத்துகள் கூறியதாக, ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார், தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஆகியோருக்கு எதிராக, நூறு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு வழங்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணையில் உள்ளது.
இந்த வழக்கில் தோனியின் வாக்குமூலத்தை வழக்குரைஞர் ஆணையர் மூலம் சென்னை உயர் நீதிமன்றம் கடந்தாண்டு பதிவு செய்தது.
இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற நிலையில், விவாத நிகழ்ச்சியின் பதிவை எழுத்து வடிவுக்கு மாற்றுவதற்கு கட்டணமாக ரூ. 10 லட்சம் செலுத்த தோனி தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து வழக்கின் அடுத்த விசாரணையை மார்ச் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.