

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நாட்டின் சராசரியைவிட அதிகம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயலாக்க மாநாடு இன்று (பிப். 12) சென்னையில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது:
தொழில்துறை அமைச்சர் இங்கே சொன்ன ஒவ்வொரு டேடா-வும், எங்களை விமர்சனம் செய்தவர்களுக்கான பதில் அதுதான்! இங்கே அவர் சொன்ன ஒவ்வொரு நம்பரும், எங்கள் குழுவுக்கான ஐந்து வருட கடுமையான உழைப்பிற்கான நம்பர். தொழில்துறையில் நாங்கள் செய்திருக்கக்கூடிய ரெக்கார்டை அடித்துச் சொல்கிறேன் அடுத்து, நாங்கள் வந்துதான் பீட் செய்யப் போகிறோம். இது உறுதி!
இன்றைக்கு இந்த மாநாட்டில் மட்டும் 52 கம்பெனிகளுடைய திறப்பு விழா! 71 கம்பெனிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா! 2 புதிய கம்பெனிகளின் புரிந்துணர்வு ஒப்பந்தம்! என சாதனை சொல்கின்ற மாநாடாக இது நடைபெறுகிறது.
கடந்த 2021 முதல் நாங்கள் செய்த பணிகளை எல்லாம் மேடை போட்டு சொல்லியிருக்கிறோம். இங்கே வந்திருக்கக்கூடிய ஊடக நண்பர்கள் அனைவரையும் நான் கேட்டுக் கொள்ள அன்போடு விரும்புவது, இவைகளை எல்லாம் முழுமையாக நீங்கள் மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும். ஏனென்றால், இந்தியாவிலேயே இது போன்ற ஒரு மாநாடு எங்கும் நடந்ததில்லை!
இன்றைக்கு தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நாட்டின் சராசரியைவிட அதிகம்! தமிழ்நாட்டின் வளர்ச்சி 11.19 சதவிகிதம்! இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், கடந்த ஆண்டு, இந்தியாவின் உற்பத்தித் துறை வளர்ச்சி, 4.5 சதவிகிதம்!
அதேசமயம், தமிழ்நாட்டின் வளர்ச்சி அதைவிட மூன்று மடங்கு அதிகமாக, 14.7 சதவிகிதம் வளர்ச்சி அடைந்திருக்கிறது! இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில், தமிழ்நாட்டின் பங்கு மட்டும் 41 விழுக்காடு! இதை மேலும் அதிகரிக்கக்கூடிய வகையில், இன்னும் பல செயல் திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்! மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டத்தில், மத்திய அரசு தருகின்ற அனுமதிகளில் கிட்டத்தட்ட 60 சதவிகிதம் தமிழ்நாட்டின் முதலீடுகளுக்கானது!
இப்போது வளர்ந்து வருகின்ற புதிய துறைகளான செமிகண்டக்டர் – AI - Deep Tech போன்றவற்றிலும், தமிழ்நாடு தன்னுடைய தடத்தை வலிமையாக பதித்துக் கொண்டு வருகிறது. முக்கியமாக, முன்னணி நிறுவனங்களின் ஒன்றாக இருக்கக்கூடிய R & D மையங்களை அமைப்பது, சிப் வடிவமைப்பு, செமிகண்டக்டர் இயந்திர உற்பத்தியை மேம்படுத்துவது இது போன்ற முயற்சிகளை வெற்றிகரமாக முன்னெடுத்துக் கொண்டு வருகிறோம்! சூலூர் மற்றும் பல்லடம் பகுதிகளில், செமிகண்டக்டர் இயந்திர உற்பத்தி பூங்காக்களை உருவாக்கியிருக்கிறோம்! இதன் மூலமாக, தமிழ்நாடு உலகளாவிய செமிகண்டக்டர் உற்பத்தி மையமாக உயரக்கூடும்! எந்த செக்டார் எடுத்தாலும், தமிழ்நாடுதான் முன்னணி மாநிலம்!
இங்கே இருக்கின்ற பல முதலீட்டாளர்களும் தமிழ்நாட்டில், தாங்கள் பெற்ற பாசிட்டிவ் அனுபவங்களை, மற்ற முதலீட்டாளர்களிடம்கூட நீங்கள் ஷேர் செய்ததால்தான், எங்களுடைய வெற்றி இன்றைக்கு சாத்தியமாகியிருக்கிறது. அதற்காக, இந்த நேரத்தில், அவர்களுக்கெல்லாம் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்!
மொத்தத்தில், உங்களுடைய வளர்ச்சிதான், எங்களுடைய மகிழ்ச்சி! குறிப்பாக, இன்றைய மாநாட்டில், தூத்துக்குடி முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் போட்ட ‘கேனெஸ் டெக்னாலஜீஸ்’ நிறுவனத்தின் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியிருக்கிறோம்! இங்கிலாந்து பயணத்தில், ‘அஸ்ட்ரா செனகா’ நிறுவனத்தின் ‘உலகளாவிய திறன் மைய’ விரிவாக்கத்திற்காக ஒப்பந்தமிட்டோம். அது துவக்கி வைக்கப்பட்டிருக்கிறது!
ஜெர்மனி நாட்டுப் பயணத்தில், ‘நார் ப்ரெம்சே’ நிறுவனத்திடம் போட்ட ஒப்பந்தத்திற்கான உற்பத்தி ஆலைக்கு - சிப்காட் மாம்பாக்கத்தில் அடிக்கல் நாட்டியிருக்கிறோம்!
டாபர் நிறுவனத்துடன் முதல் தென்னிந்திய ஆலைக்கு திண்டிவனத்தில் அடிக்கல் நாட்டியிருக்கிறோம்!
2024 உலக முதலீட்டாளர் மாநாட்டில் போட்ட ஒப்பந்தத்தின்படி, ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கத்தில், ‘டாடா சால்ட்’ நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டியிருக்கிறோம்!
கோவை முதலீட்டாளர் மாநாட்டில், ஜான்சன் எலக்ட்ரிக் நிறுவனத்திடம் போட்ட ஒப்பந்தத்திற்கு, ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பனப்பாக்கத்தில் அடிக்கல் நாட்டியிருக்கிறேன்.
மின்னணு துறையில், முன்னணி நிறுவனமாக இருக்கக்கூடிய V.V.D.N. நிறுவனம், பொள்ளாச்சியில், சுற்று வட்டாரப் பகுதி பெண்களுக்கு பயிற்சியளித்து, பணி வழங்கவுள்ள நிறுவனத்தை நிறுவியிருக்கிறார்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.