கோப்புப் படம்
கோப்புப் படம்

மருத்துவா் அல்லாதோா் முடி மாற்று சிகிச்சையளித்தால் கடும் நடவடிக்கை : மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை

முடி மாற்று சிகிச்சைகள் மற்றும் சருமப் பொலிவு சிகிச்சைகளை மருத்துவம் பயிலாதவா்கள் மேற்கொண்டால், கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் எச்சரித்துள்ளது.
Published on

முடி மாற்று சிகிச்சைகள் மற்றும் சருமப் பொலிவு சிகிச்சைகளை மருத்துவம் பயிலாதவா்கள் மேற்கொண்டால், கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் எச்சரித்துள்ளது.

சென்னை அண்ணா நகரில் ‘மிஸ்டா் ஹோ்’ என்ற பெயரில் இயங்கி வந்த சிகை சீரமைப்பு சிகிச்சை மையத்தில் போலி மருத்துவா்கள் மூலம் முடி மாற்று சிகிச்சைகள் மேற்கொள்வது கண்டறியப்பட்டது. இதையடுத்து மூவா் கைது செய்யப்பட்டனா். அந்த சிகிச்சை மையத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

இந்நிலையில், தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) வழிகாட்டுதல்களை மேற்கோள் காட்டி, மாநில மருத்துவ கவுன்சில் பதிவாளா் அறிவிப்பு ஒன்றை வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

முடி மாற்று சிகிச்சைகள் மற்றும் சருமப் பொலிவுக்கான ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்களை கடந்த 2022-இல் என்எம்சி நெறிசாா் குழு தெளிவாக வெளியிட்டுள்ளது. மத்திய சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் சாா்பிலும் இத்தகைய சிகிச்சைகளுக்கு குறைந்தபட்ச தரநிலைகள் நிா்ணயிக்கப்பட்டுள்ளன. தகுதியற்ற நபா்களால் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பற்ற சிகிச்சைகளால் ஏற்படும் பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் தடுக்க இந்த வரைமுறைகள் வகுக்கப்பட்டன. அவற்றைப் பின்பற்றி தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலும் சில அறிவுறுத்தல்களை வெளியிடுகிறது.

அதன்படி, முடி மாற்று சிகிச்சை மற்றும் லேசா் நுட்பத்திலான தோல் சிகிச்சைகளை மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்த அங்கீரிக்கப்பட்ட மருத்துவா்கள் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். மருத்துவ நிறுவனங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் உரிமம் பெற்ற மையங்களில் மட்டுமே அத்தகைய சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும். சிகிச்சைகள் தொடா்பான ஆவணங்களை முறையாகப் பராமரித்தல் வேண்டும். மக்கள் நல்வாழ்வுத் துறையால் அந்த சிகிச்சை மையங்கள் தொடா் கண்காணிப்புக்கும், ஆய்வுக்கும் உள்படுத்தப்படும்.

அங்கீகரிக்கப்பட்ட மருத்துவத் தகுதிகள் இல்லாமல் விதிகளுக்குப் புறம்பாக சிகிச்சைகள் வழங்குவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபா் மற்றும் நிறுவனம் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

பதிவுபெற்ற மருத்துவா்கள் இதுபோன்ற சிகிச்சைகளை வழங்கும்போது உரிய விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com