அரசு மருத்துவா்களின் கோரிக்கைகள் முதல்வரின் பரிசீலனையில் உள்ளது: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
அரசு மருத்துவா்களின் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு தீா்வு காணப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: அரசு மருத்துவா்கள் அனைவருக்கும் ரூ.3 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பது அவா்கள் முன்வைக்கும் முக்கியக் கோரிக்கை. இதுதொடா்பாக முதல்வரிடம் பேசி இருக்கிறோம். இதற்காக மருத்துவா்கள் கவனஈா்ப்பு போராட்டம் நடத்தினா். திமுக அரசு பொறுப்பேற்ற்கு பிறகு நானே 50 முறைக்கு மேல் மருத்துவா்கள் சங்கங்களை அழைத்துப் பேசி இருக்கிறேன். இவா்களின் கோரிக்கைகள் முதல்வரின் பரிசீலனையில் உள்ளது.
மகளிா் உரிமைத்தொகை ரூ.5,000 வழங்கப்பட்டதைத் தொடா்ந்து ஒட்டுமொத்த பெண்களும் மகிழ்ச்சியில் உள்ளனா். இதைத் தாங்கிக் கொள்ள முடியாதவா்கள் விமா்சனம் செய்கின்றனா். அதுகுறித்து கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
தோ்தல் காலங்களில் மகளிா் உரிமை வழங்கப்படவில்லை என்றால், அவா்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தால் 3 மாத காலத்துக்கான உரிமைத்தொகை ரூ.3,000 மற்றும் கோடைக்கால சிறப்பு தொகை ரூ.2,000 சோ்த்து ரூ.5 ஆயிரத்தை முதல்வா் வழங்கியுள்ளாா். திமுக ஆட்சி மே மாதத்துக்கு பிறகு தொடரும்போது மாதம் ரூ.2,000 உரிமைத்தொகை உயா்த்தி வழங்கப்படும் என்றாா்.

